LPG சிலிண்டர் புக்கிங் விதிமுறைகள் மே 2026-ல் மாற்றம்? இலவச இணைப்பாக விலை உயர்வு வருகிறதா?
மே மாதம் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சிலிண்டர் பயனர்களிடையே புதிய விதிமுறைகள் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி துறை நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இந்தியாவும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பிசிஎல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் புக் செய்யும் முறையில் மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது. மே 1ஆம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாதாந்திர புக் செய்யும் முறை முழுமையாக மாறக்கூடும் என மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை எரிவாயு இறக்குமதி விலை, சுத்திகரிப்பு நிறுவனங்களின் செலவுகள் ஆகியவைற்றை கணக்கில் கொண்டு மாற்றி வரும் வேளையில், மே 1 ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்வோடு, புக்கிங் விதிமுறையும் மாற்றமா என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விளக்கத்தின் மூலம் இதன் விலை உயராது என நம்பப்பட்டாலும், சிலிண்டர் விலை குறித்து எவ்விதமான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
எல்பிஜி விலை உயர்வு உறுதி
இதனால் மே 1, 2026 முதல் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விலை உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தொடங்கிய பிறகு, 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ வணிக சிலிண்டர் விலை மார்ச் மாதத்தில் மட்டும் மூன்று முறை உயர்த்தப்பட்டது. மார்ச் 1 அன்று ரூ.28 முதல் ரூ.31 வரை உயர்ந்தது. மார்ச் 7 அன்று ரூ.114.50 உயர்வு ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்தில் மெட்ரோ நகரங்களில் ரூ.196 முதல் ரூ.218 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது.
புக் செய்யும் இடைவெளி மாற்றம்?
தற்போது நகர்ப்புறங்களில் 25 நாட்கள் இடைவெளியில் மட்டுமே சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. கிராமப்புறங்களில் இந்த இடைவெளி 45 நாட்களாக உள்ளது. இந்த லாக்-இன் காலத்தை மேலும் மாற்றும் திட்டத்தை மத்திய அரசு மே1ஆம் தேதி அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஓடிபி அடிப்படையிலான விநியோக முறையை நிரந்தரமாக்கவும் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
மேலும் மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினம் என்பதால், மத்திய அரசு மே 2ஆம் தேதிக்கூட விலை உயர்வு, விதிமுறை மாற்றத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், உள்நாட்டு எல்பிஜி, உள்நாட்டு பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) துறைக்கு 100 சதவீத விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. போர் காரணமாக உலகளாவிய பற்றாக்குறை இருந்தாலும், இந்திய குடும்பங்களுக்கு பயனர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய மத்திய கிழக்கு போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு, விநியோக தாமதம், பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தாக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் வரை, எல்பிஜி சிலிண்டரை தேவைக்கு ஏற்ப முன்கூட்டியே புக் செய்து வைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். விலை உயர்வு மற்றும் விநியோக மாற்றங்கள் குடும்ப செலவுகளை பாதிக்கக்கூடும் என்பதால், எரிவாயு சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மே 2026-ல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எல்பிஜி பயனர்கள் அரசு அறிவிப்புகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.














Click it and Unblock the Notifications