குவைத்தின் தீ விபத்தில் மனிதச் சதைகள் கருகிய வாசம் உலகக் காற்றில் வீசுகிறது.. வைரமுத்து உருக்கம்
சென்னை: குவைத் தீ விபத்தில் மனிதச் சதைகள் கருகிய வாசம் உலகக் காற்றில் வீசுகிறது என கவிப்பேரரசு வைரமுத்து உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் மங்கப் நகரில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கியிருந்த 6 மாடிக் கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இத்தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 50-க்கும் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ2 லட்சம் நிவாரணத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் விரைந்துள்ளார்.
குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலைமை குறித்து அறிய தமிழ்நாடு அரசும் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரியம், குவைத் தீ விபத்தில் சிக்கியோர் குறித்த விவரங்களைக் கேட்டு வருகிறது.
குவைத் தீ விபத்து சம்பவத்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குவைத் தீ விபத்து சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட உருக்கமான இரங்கல்:
குவைத்தின் தீ விபத்தில்
மனிதச் சதைகள்
கருகிய வாசம்
உலகக் காற்றில் வீசுகிறது
இறந்த பின்தான்
தகனம் செய்வார்கள்;
தகனம் செய்து
இறப்பைத் தந்திருக்கிறது
நெருப்பு
இதயத்தின்
மெல்லிய தசைகள்
மெழுகாய் உருகுகின்றன
உலகம்
தோன்றிய நாளிலிருந்து
விபத்துகள் புதியனவல்ல
விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்
அது தொடர்வது
பாதுகாப்பு அளவீடுகளின்
குறைபாடுகளைக் காட்டுகிறது
மனிதத் தவறுகள்
திருந்தவில்லை என்று
வருந்திச் சொல்கிறது
மாண்டவர்களுக்காக
அழுது முடித்த இடத்தில்
அழத் தேவையில்லாத சமூகத்தை
வார்த்தெடுக்க வழி சமைப்போம்
உலகத் தொழிலாளர்களுக்கு
என் இந்தியக் கண்ணீர்
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து தமது இரங்கல் கவிதையில் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications