முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 2 நாட்கள் கெடு..மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
Recommended Video
சென்னை: அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பதில் சொல்லியாக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கையில்,
வெளிநாடுகளில் முதலீடுகளைப் பெறப்போகிறோம் எனக்கூறிவிட்டு வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரும்பியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் விரக்தியின் உச்சத்திற்கே சென்று தன்னை பற்றி குறைகூறி பேட்டியளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து வந்த முதல்வருக்கு கட்சி நிதியில் இருந்து விளம்பரங்களை கொடுப்பது போல் அரசு நிதியில் கொடுத்துள்ளதாகவும், அரசுப் பணத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவது நிதி ஒழுங்கீனம் என்பதை தலைமைச் செயலாளர் உணர்த்தியிருக்க வேண்டும் என சாடியிருக்கிறார். திமுக ஆட்சியில் ரூ.46,091 கோடி முதலீடுகள் பெறப்பட்டு இரண்டே கால் லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கானல் நீராகி போனதாகவும், 2019-ல் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காற்றில் கரைந்து விட்டதோ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆடம்பர வெளிநாட்டு சுற்றுலா நடத்திவிட்டு ஹீரோவாக வேஷம் கட்டிவரலாம் என மனக்கோட்டை கட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். அரசு நிதியை சொந்த நிதிபோல் பயன்படுத்திவிட்டு திரும்பியிருக்கும் அமைச்சர்களும், முதலமைச்சரும் தமிழக மக்களுக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும் எனக் கூறியிருக்கிறார்.
முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால் முதலீடுகள் தொடர்பான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா? என வினவியுள்ள ஸ்டாலின், அவ்வாறு உண்மைகளை முதல்வர் வெளியிட்டால் அவருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications