ஆட்சி கவிழும்.. ஆட்சி கவிழும்.. இருவரை மலை போல நம்பும் ஸ்டாலின்.. என்ன திட்டம் போடுகிறார்?
21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து, அதில் ஆட்சி கவிழாத போதும் கூட திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கவிழும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து, அதில் ஆட்சி கவிழாத போதும் கூட திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு கவிழும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவரின் நம்பிக்கைக்கு பின் இரண்டு முக்கியமான நபர்கள் உள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுக அரசு மூன்று முறை கவிழும் நிலைக்கு சென்று தப்பித்தது. ஒன்று தர்ம யுத்தத்தின் போது. இன்னொன்று டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது.
கடைசியாக 21 எம்எல்ஏக்களுக்கான இடைத்தேர்தல் நடந்த போது. இது மூன்றின் போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜதந்திரம் மூலம் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
அவர் இல்லை
முதலில் ஆட்சியை கலைக்கும் சக்தி கொண்டவராக ஸ்டாலின் இருக்கவில்லை. ஆனால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான் ஆட்சியை கலைக்க போகிறார் என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால் அவரோ பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும் என்று கடைசி வரை காத்திருந்தார். தற்போது தன்னிடம் இருந்த முக்கிய விசுவாசிகளை இழந்து கொண்டு வருகிறார்.
ஸ்டாலின் திட்டம்
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் முன்பை விட இப்போதுதான் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். இதை ஆர்வம் என்று சொல்வதை விட கட்டாயம் என்று கூறலாம். இதனால்தான் ''புறவாசல் வழியாக ஆட்சிக்கு வர மாட்டேன் என்று கூறிய ஸ்டாலின்'', தற்போது ''ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினால் நிகழ்த்திக் காட்டுவேன்'' என்று பேட்டி அளித்து உள்ளார்.
எப்படி செய்வார்
இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பலம் பெற ஆரம்பித்து உள்ளது. அதேபோல் மத்திய அரசின் முழு ஆதரவு இருப்பதால் அதிமுக தனக்கு தேவையான விஷயங்களை எல்லாம் செய்து கொள்கிறது. தமிழகத்தில் திமுகவை ஒடுக்க என்னவெல்லாம் செய்யலாமோ அதை எல்லாம் செய்ய அதிமுக கண்டிப்பாக துணியும்.
காங்கிரஸ் நிலை
மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட நிலை கண்டிப்பாக தமிழகத்தில் திமுகவிற்கு ஏற்பட கூடாது என்று ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஆனால் இந்த அதிமுக ஆட்சி நீடித்தால் திமுக அப்படி ஒரு நிலைக்கு வரலாம். முக்கியமாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக - பாஜக - ரஜினி என்ற மெகா கூட்டணி உருவாகலாம் என்று கூட பேசிக்கொள்கிறார்கள்.
எப்படி கவிழ்ப்பு
இதனால்தான் 2021 வரை காத்திருக்க வேண்டாம். பும்ரா போல 48வது ஓவரிலேயே ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இதற்காக அவர் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை மலை போல நம்புகிறார் என்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை உடைப்பார்கள் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
திட்டம் என்ன
அதன்படி செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் இருவரும் தங்களுக்கு நெருக்கமாக இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை திமுகவிற்கு கொண்டு வருவார்கள். அதன்பின் முழுமையாக ஆட்சியை கவிழ்க்கலாம். 2021 வரை காத்திருந்தால் நமக்குத்தான் பிரச்சனை என்று ஸ்டாலின் கருதுவதாக தகவல்கள் வருகிறது.. ஸ்டாலினின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!