'பீக் ஹவர்'களில் இயங்கும் குப்பை லாரிகள்.. தடை செய்யக் கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குப்பை லாரிகள் பெரும்பாலும் காலை நேரங்களிலேயே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்படுவதாக கூறி கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்க கோரியும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். குப்பைகள் மீது வலையை போர்த்தி செல்லாததால் காற்றில் அவை பறந்து சாலைகளில் கொட்டுவதாகவும், அதனால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதுடன் சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல, சென்னையிலும் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்பதால், சென்னையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க மாநகராட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குப்பை லாரிகளை இயக்க நேர நிர்ணயம் செய்ய முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications