ஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை: கேரளாவில் கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஜெயின் ஹவுஸிங் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் சந்தீப் மேத்தா என்பவர், கேரளாவில் கடற்கரை பகுதியில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியது தொடர்பான முறைகேட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில், முன் ஜாமீன் உத்தரவில் தவறான குற்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளதால், உத்தரவில் திருத்தம் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர் கேரளா தொடங்கி பல்வேறு மாநிலங்களில் அலுவலகம் வைத்து நடத்தி வருவதாகவும்,
அவர் பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தை தேர்ந்தெடுத்து முன்ஜாமீன் பெற்றுள்ளதாக வாதிட்டார்.
மேலும், மனுதாரர் நிறுவனம் கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்துக்குட்பட்ட மராடு கடலோரப் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை உச்சநீதிமன்றம் இடிக்க உத்தரவிட்டுள்ளதையும், கேரளா போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், முன்ஜாமீன் வழங்க கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications