தமிழ்நாட்டில் விரைவில் சுருக்குமடி வலைகளுக்கு அனுமதி? 4வாரத்தில் முடிவெடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்கத் தமிழ்நாடு அரசிற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அறிவழகன் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டதாகவும், இதற்கிடையில் மீன் பிடி தடை காலத்தை மறு ஆய்வு செய்யவும், மீன் வளத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு ஒரு தொழில் நுட்ப குழுவை அமைத்தது.

2014 ஆண்டு இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020ஆம் ஆண்டும் மார்ச் 23ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என 2021ஆம் ஆண்டும் ஜூலை 7ஆம் தேதி தமிழக அரசிற்கு மனு அளித்ததாகவும் அந்த மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன்வளத் துறை உதவி இயக்குநர் அனுப்பிய பதில் கடிதத்தில், சுருக்குமடி வலையைக் கொண்டு மீன்பிடி தொழில் செய்வது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்துத் தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications