சிஏஏவுக்கு எதிரான போராட்டம்.. காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் நடத்தும் போராட்டத்தை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த போராட்டம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், போராட்டங்கள் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின், அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க காவல்துறையினருக்கு எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே வழக்குப்பதிவு செய்யப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட பகுதியில் போராட்டம் நடத்த எவருக்கும் உரிமையில்லை எனத் தெரிவித்தார்.
போராட்டம் நடைபெறும் சாலையில் பள்ளி, மருத்துவமனைகள் அமைந்துள்ளதாகவும், இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளதால், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications