விஜய்க்கு பெரிய பிரச்சினை! ஒரு ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு விவகாரத்தில், திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியகருப்பன் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதனால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அதில், திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்குகள் தவறுதலாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், அவை தனது தொகுதியின் கணக்கில் சேர்க்கப்படாததால் தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வாக்குகளை மீட்டு தனது தொகுதி கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும், அதுவரை தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, "மனுதாரருக்கான தபால் வாக்குகள் தவறான மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரியான தொகுதிக்கு திருப்பி அனுப்பியிருந்தால், முடிவு மாறியிருக்கலாம். குறைந்தபட்சம் இரு வேட்பாளர்களும் சம வாக்குகள் பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது" என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், "இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் எந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளனவா?" என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தேர்தல் ஆணையம் நியமிக்கும் அதிகாரிகள் மூலம் அவை தொகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. தவறுதலாக வேறு தொகுதிக்கு சென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் தெளிவான விதி இல்லை" என்று தெரிவித்தார்.
தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இது தேர்தல் மனு மூலம் மட்டுமே சவால் செய்யக்கூடிய விஷயம். சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க முடியாது" என்று வாதிட்டார்.
இதையடுத்து, "ஒரே ஒரு வாக்காக இருந்தாலும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது" என்று தெரிவித்த நீதிபதிகள், பெரியகருப்பனின் புகாருக்கு தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்று தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்க இருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வழக்கு பெரியகருப்பனுக்கு சாதகமாகச் சென்றால் விஜய்க்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் வாக்கு அனுப்பப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், தொகுதி தேர்தல் அதிகாரிய தபால் வாக்குகள் மாறி உள்ளதாக கூறியதாக பெரிய கருப்பன் தரப்பு வாதிட்டது. இந்த நிலையில் ஒருவேளை தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பப்பட்டால் என்ன நடைமுறை பின்பற்றுப்படும் என்பது குறித்து தெளிவான விதி எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியது. இந்த நிலையில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications