மதம் மாறினாலும் 'BC முஸ்லிம்' சான்றிதழ் பெற முடியுமா? மதுரை ஐகோர்ட் கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (BC) முஸ்லிம் என்ற அடிப்படையில் சமூகச் சான்றிதழ் பெற முடியாது என்று மதுரை ஐகோர்ட் கிளை முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், இதற்கான தமிழக அரசின் அரசாணையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், கடந்த 2015-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய அவர், தனது பெயரை பரமசிவம் என்பதிலிருந்து சமீர் அகமது என மாற்றிக்கொண்டதாகவும், பின்னர், தனது சமூகச் சான்றிதழில் "முஸ்லிம் லெப்பை" என மாற்றம் செய்யக் கோரி தாசில்தாரிடம் விண்ணப்பித்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், அதை ரத்து செய்து புதிய சமூகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் விசாரித்தனர். தீர்ப்பில், மதம் மாறிய பிறகு இடஒதுக்கீட்டு சலுகைகளை கோருவது சட்டரீதியாக ஏற்கத்தக்கதா என்பது முக்கிய கேள்வி என குறிப்பிட்டனர்.
முஸ்லிம் சமூகத்தில் அன்சார், டெக்கானி, டுபெகுலா, லெப்பை, மாப்பிள்ளை, ஷேக், சையத் ஆகிய ஏழு பிரிவினரே பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC முஸ்லிம்) பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இஸ்லாமுக்கு மதம் மாறியவர் ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்தையே பெறுவார்; குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் என்ற அந்தஸ்தை மதமாற்றத்தின் மூலம் பெற முடியாது என்று ஏற்கனவே வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசாணை செல்லாது என அறிவித்த நீதிமன்றம், மனுதாரருக்கு "முஸ்லிம் லெப்பை" சமூகச் சான்றிதழ் வழங்க மறுத்த தாசில்தாரின் நடவடிக்கை சட்டப்படி சரியானதே என்றும் உறுதி செய்தது.
எனவே, முஸ்லிம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என்ற அடிப்படையில் சமூகச் சான்றிதழ் அல்லது இடஒதுக்கீட்டு சலுகைகளை கோர முடியாது; அவர் ஒரு முஸ்லிம் என்ற அடையாளத்தை மட்டுமே பெறுவார் என்று மதுரை ஐகோர்ட் கிளை தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications