30 லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்! இது யாருக்காக தெரியுமா?
சென்னை: மதுரை மாவட்ட கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் 13,000 புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.
இந்த புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

மதுரை எம்.பி.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை வாங்கியுள்ளார். அதனை பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

போட்டித் தேர்வு
போட்டித் தேர்வுகளுக்காக நகர்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தரும் நோக்கத்துடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
அதன் படி தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பினை, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினை வழங்க வைத்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.

காணொலி மூலம்
மேலும், அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு புத்தக அடுக்குகளையும் வழங்கினார். இப்புத்தக தொகுப்புகளில் மொத்தம் 13,000 புத்தகங்கள் அடங்கும். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோரும் மதுரையிலிருந்து காணொலி மூலம் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications