மதுரை டூ சென்னை சட்டசபை! முதல் தடவை விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!
சென்னை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10 மாணவர்கள் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து சென்னைக்கு வந்து, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசித்த நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இந்த ஆட்சிக்காலத்தில் பல அதிரடி சாதனைகளைச் செய்துள்ளது. இப்போதுதான் 'நான் முதல்வன்' திட்டத்தில் பங்கேற்ற 25 மாணவர்கள் லண்டன் போய் திரும்பினர். அந்தச் செய்தி பலரது கவனத்தை ஈர்த்தது.

இதற்கு முன்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தங்களின் தலைமுறையில் முதல்முறையாக தாங்கள்தான் விமானத்தில் பயணிக்கிறோம் என்று அந்தப் பிள்ளைகள் உருக்கமாகப் பேசி இருந்தனர். இப்படிப் பல நெகிழ்ச்சியான சம்பவங்களை பள்ளிக்கல்வித்துறை இந்த ஆட்சியில் பெற்றுள்ளது. அந்த வரிசையில் இப்போது 'வானில் சிறகடிப்போம்' என்ற மதுரை ரோட்டரி கிளப் திட்டம் சார்பில் இந்தப் பயணத்திற்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பத்து மாணவர்களுடன் ஒரு ஆசிரியரும் விமானத்தில் பயணம் செய்து சென்னை வந்து சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
இந்தப் பயணத்திற்குத் தேர்வான மாணவ, மாணவிகளை மதுரை மேயர் விமானநிலையம் வந்து வழி அனுப்பிவைத்திருக்கிறார். ஒவ்வொரு மாணவருக்கும் மேயர் ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மாணவர்கள் முதன் முறையாக விமானநிலையத்திற்குள் வந்துள்ளதாகவும், முதல் முறையாக விமானத்தில் பயணிக்க உள்ளதாகவும் பெருமையாகக் கூறினர்.

"நாங்கள் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் முதன்முறையாக வந்திருக்கிறோம். நாங்கள் 10 பேரும் சட்டப்பேரவைக்குப் போய் நேரில் உட்கார்ந்து பார்க்கப் போகிறோம். அங்கு முதல்வர் என்ன பேசுகிறார்? அங்கே அமைச்சர்கள் எப்படிப் பேசுகிறார்கள்? என்ன மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன? அது எதற்காகச் செய்கிறார்கள்? அதனால் நன்மைகள் என்ன? இதனால் எங்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். எங்கள் அறிவு மேம்படும்" என்று படப்படவென்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஒரு மாணவர்.
ரோட்டரி கிளப் சார்பாக பேசியவர், "குலுக்கல் முறையில் பல மாணவர்களின் பெயரைப் போட்டு தேர்ந்தெடுத்தோம். குலுக்கலில் வந்த மாணவர்களை இப்போது சென்னைக்கு அழைத்து வந்துள்ளோம்" என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் கண்டு ரசிப்பதுடன் மெரினா கடற்கரை மற்றும் சென்னை அருங்காட்சியகம் என சில பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் பறந்து வந்த இவர்கள் அனைவரும் மீண்டும் பேருந்து வழியாகவே தங்களின் சொந்த ஊருக்குத் திரும்ப உள்ளனர்.

"என் பேர் திவ்யதர்ஷினி. நான் அரசுப்பள்ளியில் தான் படிக்கிறேன். மதுரையிலிருந்து முதல்முறையாக விமானத்தில் வந்தோம். பிறகு சட்டமன்றத்திற்கு வந்து கல்வி அமைச்சர் பேசினதைக் கேட்டோம். எங்களைப் போன்ற மாணவர்களுக்கு விமான பயணம் என்பது மிகமிக கஷ்டம். வாய்ப்பு அமையாது. ஆகவே, என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இதே போன்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும். எங்கள் வீட்டிலிருந்து யாருமே பிளைட்டில் போனது இல்லை. நாங்கள் எங்கள் வீட்டு வாசலிலிருந்து ஆகாயத்தில் பறக்கும் பிளைட்டை பார்த்திருக்கிறோம். அதற்குள் ஏறிப் பயணித்தது இல்லை. மற்றொரு மாணவர் சட்டமன்றத்தை நேரில் பார்த்ததை ஆச்சரியத்துடன் விளக்கியுள்ளார். மேலும் அவையில் பல திட்டங்கள் பற்றிப் பேசியதை நேரில் உட்கார்ந்து பார்த்ததே மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.
சென்னையில் மாணவர்களைச் சுற்றிக் காட்டிய ரோட்டரி நிர்வாகி ஒருவர், "இவர்களைப் போன்ற அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் விழிப்புணர்வு அடைய வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். அதை இந்தப் பயணம் மூலம் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். நான் கூட ஒரு காலத்தில் மதுரை மாநகராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் தான். எங்கள் பகுதி பிள்ளைகளை நானே அழைத்துப் போகும் வாய்ப்பு கிடைத்தது உண்மையிலேயே மனதிற்குச் சந்தோஷமாக உள்ளது. பல அமைப்புகள் இதைப் போன்று அவர்கள் பகுதியில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்பது எனது கோரிக்கை" என்கிறார்.












Click it and Unblock the Notifications