சிறையிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவேன்.. போலீஸ் விசாரணையின்போது மகாவிஷ்ணு சொன்ன விஷயம்!
சென்னை: மகாவிஷ்ணுவிடம் போலீசார் 3 நாட்களாக சென்னை மற்றும் திருப்பூரில் வைத்து விசாரணை நடத்திய நிலையில், நான் சிறையில் இருந்தால் சிறையிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவேன் என போலீசாரிடம் மகாவிஷ்ணு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசு பள்ளியில் தன்னை பேச அழைத்தது யார் என்பது பற்றியும் மகாவிஷ்ணு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பள்ளியின் பார்வை மாற்றத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மகாவிஷ்ணுவை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த மஹாவிஷ்ணு கடந்த 11 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மகாவிஷ்ணுவை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடந்த சைதாப்பேட்டை போலீசார் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, 3 நாட்களாக மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சென்னையில் வைத்தும், திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு மகாவிஷ்ணுவை அழைத்துச் சென்றும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
"சினிமாவில் தோற்றதால் ஆன்மீக சொற்பொழிவாளராக ஆனேன். சிறையிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவேன். பெற்றோர் ஆசிரியர் சங்க நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தேன். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி சொற்பொழிவு ஏற்ற அழைத்தார்." என மகாவிஷ்ணு கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சைதாப்பேட்டை, அசோக் நகர் அரசு பள்ளிகளுக்கு மகாவிஷ்ணுவை நேரில் அழைத்துச் சென்று போலீசார் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மகாவிஷ்ணுவின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்த போது, சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த பணம் வந்த வழிகள் குறித்தும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இன்றுடன் 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில், வரும் 20 ஆம் தேதி வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications