"பயங்கரவாதியைவிட மோசமானவன் மகாவிஷ்ணு.!" நாஞ்சில் சம்பத்திற்கு வந்ததே கோபம்.. கடும் தாக்கு
சென்னை: அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய சில கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன் ஜென்மம் குறித்து எல்லாம் அவர் பேசிய பேச்சு பெரும் விமர்சனத்தைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே மகாவிஷ்ணு பயங்கரவாதியை விட மோசமானவர் என்று நாஞ்சில் சம்பத் சாடியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.

சர்ச்சை பேச்சு: முன் ஜென்மம் பாவ புண்ணியம் குறித்துப் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் குறித்தும் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்களில் ஒருவர் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவர் மட்டும் அரசுப் பள்ளியில் வந்து ஏன் ஆன்மீக சொற்பொழிவை நடத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அவரிடமும் "நீங்க சிஇஓவை விட அறிவாளியா!" என்றெல்லாம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார்.
கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்த நிலையில், மகாவிஷ்ணு தனது பேச்சைத் தொடர்ந்தார். அவரது இந்த பேச்சுகள் இணையத்தில் பரவி டிரெண்டான நிலையில், பலரும் இதைச் சாடினர். பள்ளியில் பிற்போக்குத்தனமான கருத்துகளைப் பரப்பிய மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினர்.
நடவடிக்கை: இது பெரிய விவகாரமாக வெடித்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்றார். மகாவிஷ்ணு பேச்சுக்கு எதிராகக் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரை மேடையில் அழைத்துப் பாராட்டிய அன்பில் மகேஷ், மாணவர்களிடையே உரையாற்றவும் செய்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நாஞ்சில் சம்பத்: இது ஒரு பக்கம் இருக்க மகாவிஷ்ணு பேச்சைப் பலரும் கண்டித்து வருகிறார்கள். இதற்கிடையே அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்தும் மகாவிஷ்ணு மீது மிகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மகாவிஷ்ணு பயங்கரவாதியைவிட மோசமானவர் என்று விமர்சித்துள்ள நாஞ்சில் சம்பத், ஒரு தலைமுறையையே நாசமாக்க அவர் முயல்வதாகவும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பயங்கரவாதியைவிட மோசமானவன் மகாவிஷ்ணு..! ஒரு தலைமுறையை நாசமாக்கும் அயோக்கியத்தனத்தை நாளும் செய்துவரும் மகாவிஷ்ணுவுக்கு அரசு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்..!" என்று அவர் கூறியுள்ளார்.
கைது: முன்னதாக மகாவிஷ்ணுவின் பேச்சுகள் சர்ச்சையான நிலையில், அவர் ஆஸ்திரேலியா நாட்டிற்குத் தப்பிச் சென்றார். பிறகு அங்கிருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்ட மகாவிஷ்ணு, தான் தவறாக எதையும் பேசவில்லை என்றும் இந்தியா வருவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இந்தியா திரும்பிய மகாவிஷ்ணு நேற்று கைது செய்யப்பட்டார். பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 20 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் என்ற அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications