சென்னை திநகர் டாக்டர் வீட்டில் 90 பவுன் நகை திருடிய விஜயலட்சுமி.. வேலைக்கார பெண் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை தியாகராய நகரில் டாக்டர் வீட்டில் வேலை செய்த வேலைக்கார பெண் 90 பவுன் நகைகளை கொள்ளையடித்திருக்கிறார்.. அவரை எப்படி போலீசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் சில நேரங்களில் உரிமையாளர்கள் வீட்டில் உள்ள நகை, பணம் பொருட்களை திருடுவது நடக்கிறது. மிகவும் உரிமையாக பழகும் உரிமையாளர்களிடம், மனசாட்சி இல்லாமல் சில வேலைக்காரர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். தாங்கள் சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று ஆசையில் வீட்டின் உரிமையாளர்களின் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள்.. சென்னை தியாகராய நகரில் டாக்டர் வீட்டில் ஒரு வேலைக்கார பெண் கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி மாட்டியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

சென்னை தியாகராயநகர் சாரங்கபாணி தெருவில் 32 வயதாகும் டாக்டர் பங்கஜ் குமார் வசித்து வருகிறார். பங்கஜ் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். அண்மையில் கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பங்கஜ் குமாரின் மனைவி திட்டமிட்டிருக்கிறார்.. திருமணத்திற்கு போகும் போது தான் சேர்த்து வைத்திருந்த அனைத்து நகைகளை அணிவதற்காக பீரோவை திறந்து தேடி பார்த்தார்.
அப்போது டாக்டரின் மனைவிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் வைத்திருந்த 90 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.. பீரோவிற்குள் வைத்திருந்த நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் தவித்துள்ளார் டாக்டரின் மனைவி. நகைகளை எல்லாம் யாரோ கொள்ளையடித்துள்ளார்கள் என்பதை கண்டுபிடித்த டாக்டர் பங்கஜ் குமார், உடனடியாக சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். பாண்டிபஜார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்
வீட்டின் பீரோவிற்கு சாவி போட்டு திறந்தே கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் நெருக்கமானவர்களே திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணையை போலீசார் தொடங்கினார்கள்.. போலீஸ் விசாரணையில் டாக்டர் பங்கஜ்குமார் வீட்டில் வேலை பார்த்து வந்த 22 வயதாகும் விஜயலட்சுமி என்ற பெண் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து பாண்டிபஜார் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய பின்னர், நகைகளை கொள்ளையடித்ததை விஜயலட்சுமி ஒப்புக் கொண்டார். அதன்பேரில் வேலைக்கார பெண் விஜயலட்சுமி நேற்று கைது செய்யப்பட்டார். திருடிய நகைகளை, நகைக்கடை ஒன்றில் விஜயலட்சுமி விற்பனை செய்திருக்கிறார். அதன் மூலம் வந்த பணத்தில் விஜயலட்சுமி ஆடம்பரமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.
குறிப்பிட்ட நகைக்கடையில் இருந்து நகைகளை மீட்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளார்கள். இந்த வழக்கில் விஜயலட்சுமியின் உறவினரான 29 வயதாகும் வருண்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதனிடையே திருட்டு நகைகளை வாங்கிய, நகைக்கடை அதிபர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இதனிடையே பீரோ அவ்வப்போது திறந்து கிடந்த நிலையில் அதில் உள்ள நகைகளை பார்த்ததும், விஜயலட்சுமிக்கு ஆசை ஏற்பட்டுள்ளதாம்.. கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..












Click it and Unblock the Notifications