4 விஐபிகள்.. எடப்பாடியின் காலை சுற்றின "பாம்புகள்".. பாஜகவை சமாளிக்க முடியுமா.. ஒரு ஸ்பெஷல் பேட்டி
எடப்பாடி பழனிசாமி பாஜகவின் நெருக்கடிகளை சமாளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: அதிமுக மாஜிக்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி, சிவி சண்முகம்.. இவர்கள் 4 பேருமே எடப்பாடிக்கு காலை சுற்றின பாம்புகள், இவர்களை மீறி எடப்பாடி பழனிசாமியால் அரசியல் செய்ய முடியாது என்று அரசியல் ஆலோசகரும் பத்திரிகையாளருமான மணி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் ஒன் இந்தியாவுக்கு பத்திரிகையாளர் மணி ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், அதிமுகவில் நிலவும் பூசல்கள், அதை எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கையாளும் முறை, அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீடு, பாஜகவின் எதிர்பார்ப்புகள் குறித்தெல்லாம் விலாவரியாக தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இவை:
"ஜெயலலிதா மாதிரி தொண்டர்களிடம் செல்வாக்கு நிறைந்தவர் கிடையாது எடப்பாடி பழனிசாமி.. இந்த நிர்வாகிகள் கூட, இன்றைக்குதான் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள்.. என்றைக்குமே எடப்பாடி பக்கம் இருப்பார்களா என்று உறுதியாக சொல்ல முடியாது..
உள்ளதும் போச்சா கோவிந்தா! அதிமுக ஆபீசுக்கு செல்ல ஓபிஎஸ்-க்கு போலீஸ் அனுமதி மறுப்பு?
4 புள்ளிகள்
ஒருவேளை நாளைய சூழலில், ஓபிஎஸ்ஸை மேலும் பலவீனப்படுத்தி, தன்னுடைய செல்வாக்கை எடப்பாடி அதிகப்படுத்தி கொண்டாலும்கூட, 4 பேர் வைத்துதான் அவரது அரசியல் நகர்கிறது.. எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி முனுசாமி, சிவி சண்முகம்.. இவர்கள் 4 பேருமே எடப்பாடிக்கு காலை சுற்றின பாம்புகள்தான்.. அதிலும் எஸ்பி வேலுமணி மிக முக்கியமானவர்.. அங்கே வேலுமணி என்றால், இங்கே சிவி சண்முகம்.. இந்த 4 பேரையும் சமாளித்துகொண்டு, அரசியல் செய்வது சிரமம்.. இவர்கள் 4 பேரும் எப்பவுமே எடப்பாடிக்கு ஆதரவு தருவார்கள் என்று சொல்ல முடியாது..
சாம்ராஜ்ஜியம்
இன்னொரு பக்கம் பாஜக பின்னிருந்து இவர்களை உசுப்பிவிடும்.. எஸ்பி வேலுமணி மீது ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கிறது.. அன்று தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தியவர்கள் இவர்கள்.. தற்போது, அதிமுக விவகாரத்தில எடப்பாடி பழனிசாமிக்கான சிக்கல் என்பது எதுவுமே முற்றுப்பெறவில்லை.. இன்று நீதிமன்ற உத்தரவு சாதகமாக வந்துள்ளதை வைத்து, அதிமுகவையே மொத்தமாக வாரிசுருட்டி கைகளில் வைத்துக் கொண்டார் என்று சொல்ல முடியாது..
எடப்பாடி பவர்
இன்னும் சொல்லப்போனால் எடப்பாடிக்கு பிரச்சனையே மேல்தான் ஆரம்பமாக போகிறது.. அவருடைய அணியில், அவரை ஆதரித்தவர்கள் இன்னும் எத்தனை நாள் ஆதரிப்பார்கள் என்று சொல்ல முடியாது.. இவர்கள் எல்லாம் அன்று ஜெயலலிதாவுக்கு அடங்கியிருநததுபோல், எடப்பாடிக்கு அடங்கியிருக்க மாட்டார்கள்.. எடப்பாடிக்கு தற்போது பவரும் இல்லை..
வெற்றிடம்
இன்னொரு பக்கம், பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாலும், எடப்பாடியின் ஒற்றை தலைமையை மோடி, அமித்ஷா விரும்பாத காரணத்தினாலும், எடப்பாடியால் ஜெ.மாதிரி கட்சியை ஒருங்கிணந்து நடத்துவதும் மிகப்பெரிய கேள்விதான். ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக செல்வதை பாஜக விரும்பவில்லை.. அவர்கள் இரட்டை தலைமையை தான் விரும்புகிறார்கள்.. அவர்களை மீறி இது நடக்காது.. ஜெ. மறைவுக்கு பிறகு, இருக்கும் வெற்றிடத்தை தனக்கு சாதகமாகவே பாஜக பயன்படுத்தி கொள்ளும்.. கடந்த காலங்களில் அதிமுகவே, இவர்கள் சொல்லிதான் ஆட்சி நடந்துள்ளது.. மோடி சொல்லித்தான் கட்சியில் சேர்ந்தேன் என்று ஓபிஎஸ் ஓபன் ஸ்டேட்மென்ட் தரவில்லையா? ஆளுநர் வித்யாசாகரும், இவர்கள் 2 பேரின் கைகளையும் பிடித்து இணைத்து வைக்கவில்லையா?
நெருக்கம் + நெருக்கடி
அதனால், எடப்பாடிக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து அடுத்தடுத்த விசாரணைகள் நிகழும்.. ஆனால், அதையும் சமாளிக்கவே எடப்பாடி தயாராகிவிட்டதாக தெரிகிறது.. இந்த முறை பாஜகவுக்கு அடங்கிபோக எடப்பாடி தயாராக இல்லை.. காரணம், "ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என நீங்கள் நிறுத்தும் நபர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், முக்கிய மசோதாவுக்கு ஆதரவு தருகிறோம்.. ஆனால், எங்க கட்சி விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்" என்பதுதான் எடப்பாடி டீமின் வாதமாக உள்ளது.. இது பாஜகவை நிச்சயம் யோசிக்க வைக்கும்..
பாஜக
அதாவது, ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டிவிட்டு, தன் ஆளுமையை தொடர்ந்து எடப்பாடி நிரூபிக்கும்பட்சத்தில், பாஜக ஒருவேளை இணங்கி வரலாம்.. அதேமாதிரி, ஜெ,போல வளர்ந்துவிடாமலும் அவரை பாஜக பார்த்து கொள்ளும். 2ஆக கட்சி பிரிந்திருந்தால் மட்டுமே தாங்கள் சொல்வது நடக்கும் என்று பாஜக நம்புகிறது.. அதனாலேயே இரட்டை தலைமையை விரும்புகிறது.. இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்க போகிறார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்" என்று தன் கருத்தை நம்மிடம் தெரிவித்தார் பத்திரிகையாளர் மணி.