"டமார்".. கலங்கிய தண்ணீரில் மீன்பிடிக்கும் எண்ணம் இல்லை.. எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? யாரை சொல்கிறது பாஜக?
எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக கூட்டணி வைக்க போகிறதா என அண்ணாமலை பதிலளித்துள்ளார்
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரத்தில், நாங்கள் சத்தியமாக தலையிடுவதில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தேசிய அளவில் பாஜக முதன்மை கட்சியாக... ஏகப்பட்ட மாநிலங்களில் தேர்தல் வெற்றிகளை குவித்து வைத்திருந்தாலும், தென் மாநிலங்களில் அதுவும் தமிழகத்தில் இன்னும் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியாமல் இருக்கிறது.
இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி முதல் யாராலுமே ஜீரணிக்கவும் முடியவில்லை என்பதாலேயே தமிழகத்தின் மீது தற்சமயம் கவனம் அதிகமாகவே குவிந்து வருகிறது.

இம்மியளவு
தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு தான் முதன்மை காரணம் என்பதை மெதுவாகத்தான் பாஜக மேலிடம் புரிந்து கொண்டதுடன், திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் தம்மால் ஒரு இம்மியளவுகூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தையும் உணர்ந்து கொண்டுவிட்டது.. தற்சமயம், அதிமுகவின் தோளில் சவாரி செய்ய வேண்டிய நிலைமைக்கு பாஜக ஆளாகி உள்ளது என்றாலும், இதற்கு காரணம் பிளவுபட்ட அதிமுகவாக இருந்து வருவது, வருந்தத்தக்கது.. கவலைக்குரியதும்கூட.

பிளவு பிளவாய்
அதேசமயம், ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேலிடம் விரும்பி வருவதாகவும், அதற்கான மறைமுக அழுத்தங்களை பலவழிகளில் தந்து வருவதாகவும் கூறப்படுகிறது.. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடிப்பதால், கட்சியின் பிளவு அப்படியே உள்ளது.. எனினும், பாஜக மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாம் + ஓபிஎஸ் இருவரையுமே சமமாகவே நடத்தி, முக்கியத்துவம் தந்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.. அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட்டாலும் தவறில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் இருந்தே பல சீனியர்கள் பேட்டிகளாக தந்தும் உள்ளனர்.

கூச்சல் குழப்பம்
அவ்வளவு ஏன், அன்று கட்சிக்குள் ஒரு குழப்பம் என்றதும், பிரதமர் மோடிதான் தலையிட்டு, விவகாரத்தை தீர்த்தார்என்றும், துணை முதல்வர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும், பிரதமர் அழுத்தம் கொடுத்ததால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றேன்" என்றும் ஓபிஎஸ் தன்னுடைய பேட்டிகளிலும் சொல்லி வருகிறார்.. அந்தவகையில் பாஜக மேலிடம், யாரை ஆதரிக்கிறது? அதிமுக விவகாரத்தில் என்ன செய்ய போகிறது? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது..

யாருடன் கூட்டணி
இப்படிப்பட்ட சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார். அதிமுக விஷயத்திலும் பொறுத்திருக்கிறோம்.. கட்சி நல்ல முடிவெடுக்கும் என்று நம்புகிறேன்.. எடப்பாடி பழனிசாமியை தலைவராக அங்கீகரிக்கிறீர்களா? அதிமுகவுடன் கூட்டணியா? ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக ஏற்கிறீர்களா? அதிமுக விவகாரத்தில் பாஜக ஏன் தலையிட்டு சமரசம் செய்யக்கூடாது என்பன போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன.. அதற்கு அண்ணாமலை தந்த பதில்தான் இது:

பலம் + பலவீனம்
"தொண்டர்கள்தான், எந்த ஒரு கட்சியின் பயணத்தையும் தீர்மானிக்கிறார்கள்.. அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து வருகிறது.. கோர்ட்டுக்கும் போயுள்ளார்கள்.. இரு தரப்பிலுமே விளக்கம் தந்துள்ளனர்.. அதன் முடிவு வரும்வரை பொறுத்திருப்போம். அதேசமயம், நாடு முழுவதிலும் பாஜகவுக்கு சில கட்சிகளுடன் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.. பீகார், வடகிழக்கு மாகாணங்களில் கட்சிகளுடன் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை.. எனவே இது பாஜகவுக்கு புதிது கிடையாது.. அதனால், அந்தந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறோமே தவிர, தனிப்பட்ட தலைவர்களுடன் கூட்டணி வைப்பது கிடையாது.

"பொதுச்செயலாளர்"
"பொதுச்செயலாளர்" என்று எடப்பாடி பழனிசாமியே தன்னை சொல்லி கொள்வதில்லை.. இடைக்கால பொதுச்செயலாளர் என்றுதான் சொல்கிறார்.. அதைதான் நாங்களும் சொல்கிறோம்.. அவர் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். தமிழகத்தின் முனன்ள் முதல்வரும்கூட.. அவரே தன்னை தலைவர் சொல்லி கொள்ளாமல் இடைக்கால பொதுச்செயலாளர் என்று சொல்லும்போது, அந்த வார்த்தையைதான் நாங்களும் ஏற்று பயன்படுத்தி வருகிறோம்.

ஆசைப்பட்டனர்
இப்போதுவரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம்.. ஒரு மாநில தலைவராக என்னிடம் சில விஷயங்களை கேட்டாலும், நான் தேசிய தலைமைக்கு கட்டுப்பட்டுள்ளேன்.. தேசிய தலைவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு இந்த கட்சி கட்டுப்பட்டுள்ளது.. சமீபத்தில் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்திருந்தார்.. முன்னாள் முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக பிரதமரை சந்திக்க எடப்பாடி விரும்பினார்.. அதன்படியே சந்தித்தார்..

கலங்கிய தண்ணீர்
அதேநேரத்தில் ஓபிஎஸ் தற்போதைய எதிர்க்கட்சி துணை தலைவர், முன்னாள் முதல்வர், அவரும் பிரதமரை சந்திக்க விருப்பப்பட்டார்.. 2 பேருமே பிரதமரை பார்க்க வேண்டும என்று ஆசைப்பட்டார்கள், பார்த்தார்களே தவிர, கட்சி தலைவர் அடிப்படையில் இந்த நிகழ்வு நடக்கவில்லை.. தீர்ப்பை வைத்துதான் அந்த கட்சியின் முடிவு எடுக்கப்படும்.. அதனால், அதுவரை பொறுத்திருப்போம் பாஜகவை பொறுத்தவரை, கலங்கிய நீரில் மீன்பிடிக்க வேண்டிய எண்ணம் கிடையாது. கிடையாது.. உட்கட்சி பிரச்சனை அதிமுகவில் நடக்கிறது.. ஆனால், அன்றைய தினம் பிரதமர் மோடிதான் தங்கள் விஷயத்தில் தலையிட்டதாக ஓபிஎஸ் சொல்லுவதாக கூறுகிறீர்கள்..

சத்தியம் சத்தியம்
அப்படி ஒரு விஷயம் அன்று நடந்தது, நடக்கவில்லையா? என்று எனக்கு தெரியாது.. தெரியாத ஒரு விஷயத்தை பற்றி நான் பேசவும் முடியாது.. இன்னைக்கு நான் மாநில தலைவராக உள்ளேன்.. 100 சதவிகிதிம் அதிமுக விஷயத்தில் சத்தியமாக தலையிடுவது கிடையாது.. அந்த கட்சியில் எந்த ஒருவருக்கும் சாதகமாக செயல்படவும் இல்லை. ஒருவரை சாதகமாகவும், இன்னொருவரிடம் பாதகமாகவும் நடந்து கொள்வது ஜனநாயகத்துக்கே எதிரானது.. எந்த விதத்திலும் அது நியாயம் கிடையாது" என்றார்.











Click it and Unblock the Notifications