விஷ பாம்புக்கு கூட நல்ல பாம்பு என்று தான் பெயர்.. "மக்கள் மாளிகை" குறித்து சண்முகம் கடும் விமர்சனம்
சென்னை: ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, மக்கள் மாளிகை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பெயர் மாற்றம் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, 'மக்கள் மாளிகை தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் "மக்கள் மாளிகை" என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, "ராஜ்பவன், தமிழ்நாடு" என்பது "மக்கள் மாளிகை தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
மக்கள் மாளிகை
உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை "மக்கள் மாளிகை" ஆகப் பரிணாமம் அடைவதைப் பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது.
இது, இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டிவிட்டர், முகநூல் பக்கங்களில் லோக் பவன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷப்பாம்பு
இந்நிலையில், இந்தப் பெயர் மாற்றம் குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். விஷப் பாம்புக்கு கூட நல்ல பாம்பு என்றுதான் பெயர், இந்தப் பெயர் மாற்றத்தால் அவர்கள் குணம் மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஆளுநர் மாளிகை பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பெ.சண்முகம், "கொடிய விஷமுள்ள பாம்புக்குகூட நல்ல பாம்பு என்றுதான் பெயர். நல்ல பாம்பு என்று சொல்வதால் அதற்கு விஷமில்லை என்று அர்த்தம் இல்லை. ராஜ் பவனை மக்கள் பவன் என மாற்றியதால் அவர்கள் குணம் எல்லாம் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வர முடியாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications