மகேந்திரனை துரோகி என்று கமல்ஹாசன் சொன்னதால் அதிருப்தி.. கோவை ம.நீ.ம நிர்வாகி தினேஷ் குமார் ராஜினாமா
சென்னை: மக்கள் நீதி மய்யம், கோவை தென்கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து, தினேஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார்.
Recommended Video
துணைத் தலைவராக பதவி வகித்து ஏற்கனவே கட்சியை விட்டு விலகிய மகேந்திரனை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், துரோகி எனக் குறிப்பிட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார் தினேஷ் குமார்.
சட்டசபை தேர்தலில் ம.நீ.ம ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. கோவை தெற்கு தொகுதியில், வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்தபோதும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1358 வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார் கமல்ஹாசன்.

நிர்வாகிகள் விலகல்
இதையடுத்து, ம.நீ.ம கட்சியின் பல நிர்வாகிகள், கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் மகேந்திரன், எம். முருகானந்தம், மெளரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே. குமாரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் மகேந்திரனும் ராஜினாமா செய்தார். பின்னர் மதுரவாயல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட பத்மபிரியாவும் கட்சியிலிருந்து வெளியேறினார்.

மற்றொரு நிர்வாகி
இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யத்தின், கோவை தென்கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக (பொள்ளாச்சி வால்பாறை) செயல்பட்ட, தினேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மண்ணின் மகன் மகேந்திரன்
தேர்தலுக்கு பிறகு நமது கட்சியில் நடக்கும் சில நிகழ்வுகள் எனக்கு மன வருத்தத்தையும் மன உளைச்சளையும் தருகிறது. மேலும் எங்கள் மண்ணின் மைந்தரான நம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் அவர்கள் நம் கட்சிக்காக அயராது உழைத்தவர். தன் உடல் உழைப்பிலும், நேரத்திலும், பொருளாதாரத்திலும் அவருடைய பங்களிப்பு நம் கட்சிக்கு மிக உறுதுணையாக இருந்தது.

துரோகி என்று விமர்சனம்
அத்தகைய நல்ல உள்ளம் கொண்ட எங்கள் மண்ணின் மைந்தரான மகேந்திரனை நீங்கள் "துரோகி" என்று அபச்சொல் சாடினீர்கள், அதை என்னால் ஏற்க முடியவில்லை. தனது நேரத்தையும் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தந்து கட்சியை பன்மடங்கு வலுசேர்த்து தந்த அவருக்கே இந்தநிலை என்றால் நாளை என்னைப் போன்றவர்களின் நிலை...? ஆகவே இன்று முதல் கோவை தென்கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் விலகுகிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications