திருப்புமுனையை ஏற்படுத்திய கார்கே போன் கால்.. கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவுக்கு பின்னணி என்ன
சென்னை: இன்று மாலை வரை விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் அதற்கு பிறகு இடதுசாரிகள் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளித்ததனாலும், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் ஆதரவு தெரிவிப்பதாக கூறியதால் விஜய் தமிழகத்தின் முதல்வர் ஆக உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போனில் தொடர்பு கொண்டு பேசியதே, இந்த திருப்புமுனைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. 108 தொகுதிகளில் தவெக வென்றது. அந்த கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சிகளிடம் இருந்து விஜய் ஆதரவு கோரினார்.

ஆட்சி அமைப்பதில் இழுபறி
திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதன் மூலம் அந்த கட்சிக்கு 113 கிடைத்தது. எனினும், பெரும்பான்மைக்கு 118 என்ற எண் கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் ஆர்லேகர் கூறினார். இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
118 என்ற மேஜிக் எண்ணை பெறுவதற்காக கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக ஆதரவு கேட்டது. ஆனால் இந்த கட்சிகளிடம் திமுகவும் ஆதரவு கோரியது. திமுக வெளியில் இருந்து ஆதரிக்க அதிமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு மத்தியில் இடதுசாரிகள் மற்றும் விசிக முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்தது வந்தது.
திக் திக்குடன் காத்திருந்த தவெகவினர்
இதனால் தவெகவினரும் திக் திக் மனநிலையுடன் காத்திருந்தனர். மற்றொரு பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்களை புதுவையில் சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி பொறுத்து இருங்கள் நல்ல செய்தி வரும் என்று கூறினார். இதனால், தமிழக அரசியலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பு திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தது.
இதற்கு மத்தியில், தவெக நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உடனடியாக முடிவு அறிவிக்கவில்லை. நிர்வாக குழு கூடி முடிவெடுத்தபிறகே முடிவு எடுப்போம் என்று அறிவித்தது. அதேபோல கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக பயணித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்தே எங்களின் நிலைப்பாடும் இருக்கும் என்று திருமாவளவன் கூறினார்.
போனில் பேசிய கார்கே
இவ்வாறாக இழுபறி நீடித்துக்கொண்டே வந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தியின் பங்கு இந்த விவகாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசிக தலைவர் திருமாவளவனை தொடர்பு கொண்டு மல்லிகார்ஜுனா கார்கே பேசியதாகவும் அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் பேசியதாக சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications