தமிழ்வழி சான்றிதழில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்த குரூப் 1 அதிகாரிகள்.. 9 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் முறைகேடாக தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்ததாக வருவாய் கோட்டாட்சியர் உள்பட 9 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதில் முறைகேடு செய்து சிலர் பணிக்கு சேர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கான(PSTM) பணி ஒதுக்கீட்டில் அரசுப் பணி பெற்ற சிலர் தேர்வில் முறைகேடு பெற்றதாகவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை அமர்வு, முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு மதுரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவினை பிறப்பித்தது. இதன் அடிப்படையில், மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் தமிழ் வழியில் பயின்று குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணி பெற்ற 4 பேர் முறைகேடு செய்து இருப்பது கண்டறியப்பட்டது.
மதுரையில் வணிகவரித்துறை உதவி ஆணையராக பணியாற்றி வரும் சொப்னா( மாற்று பாலினத்தவர்), கோவை கலெக்டரின் தனி உதவியாளராக பணியாற்றி வரும் என்.ஏ சங்கீதா, சேலம் மாவட்டம் ஆத்தூர் காவல் துணைக்காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் கேசி சதீஷ்குமார் மற்றும் காஞ்சிபுரம் பயிற்சி வருவாய் கோட்டாட்சியராக உள்ள எம். கலைவாணி ஆகிய நான்கு பேரும் முறைகேடு செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேருக்கும் விதிகளுக்கு புறம்பாக முறைகேடாக பிஎஸ்டிஎம் கல்வி சான்றிதழ் வழங்கியதற்கு காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்திய மூர்த்தி, டிஸ்டன்ஸ் எஜுகேஷன் கல்வி இயக்கக எஸ்சி/எஸ்டி பிரிவு கண்காணிப்பாளர் புருஷோத்தமன், தேனியை சேர்ந்த கல்வி நிறுவன நிர்வாகி ஏ. முரளி, நாராயண பிரபு, கோவையை சேர்ந்த கல்வி நிறுவன அதிகாரி ஏ ராஜேந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, முறைகேடாக பணியில் சேர்ந்ததாக வணிக வரி உதவி ஆணையர் சொப்னா, காவல் துணை கண்காணிப்பாளர் கேசி சதீஷ்குமார், எம்.கலைவானி, என்.ஏ சங்கீதா ஆகிய குரூப் 1 பிரிவு அதிகாரிகள் உள்பட 9 பேர் மீதும் மதுரை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முறைகேடாக அரசு பணி பெற்றது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குரூப் 1 பிரிவு அதிகாரிகள் முறைகேடாக பணி பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் வழி கல்வி சான்றிதழ்: தமிழக அரசு பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற, தேர்வர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதாவது 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றால் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியிலும், டிகிரி கல்வி தகுதி கொண்ட தேர்வு என்றால், டிகிரி வரையிலும் தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பாதியளவு தமிழ் வழியில் படித்திருந்தால் தமிழ் வழி இடஒதுக்கீடு கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications