மாணவர்களை குறிவைத்து சப்ளை.. சென்னையில் பல கோடி மதிப்புடைய போதை பொருளுடன் சுற்றியவரை தூக்கிய போலீஸ்!
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பெட்டமின் என்ற போதைப்பொருளுடன் சுற்றிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அனகாப்புத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது கையும் களவுமாக சிக்கினார்.
தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நேற்று வெளியிட்டு அறிக்கையில் கூட, குட்கா பான்மசாலா உள்ளிட்ட்ட போதைப் பொருட்களை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது: "பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ள பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை காவல்துறை இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்து 51 ஆயிரத்து 186 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 12 ஆயிரத்து 240 கடைகளில் 91 ஆயிரத்து 959 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
போதைப்பொருள் பறிமுதல்: இதன் தோராய மதிப்பு 6 கோடியே 16 லட்சத்து 43 ஆயிரத்து 395 ரூபாய் ஆகும். மேலும், 6 ஆயிரத்து 568 சிறு குற்ற செயல்கள் கண்டறியப்பட்டு 3 கோடியே 56 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை குறித்த புகார்களை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை செயலி வாயிலாகவும் 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் வாயிலாகவும் பதிவு செய்யலாம்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மற்றொரு பக்கம் போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பல்லாவரம் அருகே அம்பெட்டமின் என்ற போதைப்பொருளுடன் சுற்றிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அனகாப்புத்தூர் பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சந்தேகப்படும் படியாக முடிச்சூரை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் நின்று கொண்டு இருந்தார்.
போலீசாருக்கு பாராட்டு: அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை மேற்கொண்டதில் போதைப் பொருள் பிடிபட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். கல்லூரி மாணவர்கள் ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து இந்த போதை பொருளை சூரிய மூர்த்தி விற்று வந்ததது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இளம் தலைமுறையினரை சீரழிக்கும் போதை பொருளை விற்று வந்த நபரை கைது செய்த இன்ஸ்பெக்டர் சரவணன் மார்த்தாண்டன் தலைமையிலான போலீஸ் குழுவிற்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications