மது எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஜக...!
சென்னை: மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மது எதிர்ப்பு பிரச்சாரம் கடந்த ஒரு வாரகாலமாக தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
அண்மைக்காலமாக அரசியல்கட்சியினர் சில தனி அஜெண்டாக்களை உருவாக்கி அதன்படி செயல்படத்தொடங்கியுள்ளனர். அதற்கு உதாரணமாக திமுக இளைஞரணியினர் குளம்,ஏரி தூர்வாருதல் பணிகளில் ஈடுபட்டு வருவதை கூறலாம். அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியும் மது எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

பேருந்துநிலையங்கள், கல்லூரி வாசல்கள், உள்ளிட்ட இடங்களில் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதோடு மட்டுமல்லாமல் டாஸ்மாக் பார்களுக்கே சென்று மதுவால் ஏற்படும் தீமைகளையும், குடும்பச் சீரழிவுகளையும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் எடுத்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் டாஸ்மாக்கில் நேற்று மது எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினரிடம் மதுபோதையில் இருந்த சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாங்க எங்க காசுல குடிக்கிறோம், உங்களுக்கு என்னயா வந்துச்சு என மஜகவினரிடம் கேள்வி எழுப்பியதோடு, கிண்டலும் அடித்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மதுவின் மூலம் ஏற்படும் அழிவுகளை பற்றி டாஸ்மாக்கில் அரைமணி நேரம் நின்று மஜகவினர் விளக்கினர். இதனை ஒரு சில குடிமகன்கள் ஏற்றுக்கொண்டதோடு சூழ்நிலையால் மது அருந்தும் பழக்கத்தக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

இதனிடையே மதுவிலக்கு கொண்டுவரக்கோரி விரைவில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, அதற்கான அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications