ஜாக்கிரதை தேவை மக்களே! கேரளாவில் மங்கி பாக்ஸ் உறுதி! தமிழகத்தில் பரவாமல் இருக்க நடவடிக்கை தீவிரம்
சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றனர்.
இந்தச் சூழலில் இப்போது அடுத்த பாதிப்பு வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அது தான் மங்கி பாக்ஸ்!

மங்கி பாக்ஸ்
கோவிட்-19 போல இந்த மங்கி பாக்ஸ் புதுவித நோய் இல்லை. இருப்பினும், வழக்கமாக ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த வைரஸ் பாதிப்பு காணப்படும். இருப்பினும், முதல்முறையாக ஆப்பிரிக்காவில் வெளியே இந்த வைரஸ் பாதிப்பு இந்தளவுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது இந்த வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு வேகமாகப் பரவுவது ஏன் என்பது ஆய்வாளர்களுக்கே புரியவில்லை.

கேரளா
இதுவரை உலகின் பல நாடுகளில் 300க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் நேற்று வரை இந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் ஐக்கிய அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டது. வெளிநாட்டில் அவர் மங்கி பாக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசு
இதனால் எச்சரிக்கை உடன் இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. இதனிடையே மங்கி பாக்ஸ் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழக-கேரளா எல்லை
அண்டை மாநிலமான கேரளாவில் மங்கி பாக்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எங்குத் தமிழ்நாட்டிற்கும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும். தக்காளி வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் இருந்தே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதே நடைமுறை தான் இப்போதும் தொடர்வதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

டெஸ்டிங்
இது தொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கூறுகையில், "இப்போது வரை தமிழ்நாட்டில் யாருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. வைரஸ் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு டெஸ்டிங் செய்யப்படும். இதற்காகச் சென்னை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொப்பளங்கள்
மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடல் முழுக்க கொப்பளங்கள் உருவாகும். அவை விழும் வரை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பொதுவாக மங்கி பாக்ஸ் பாதிப்பு இருந்தால் சில நாட்களில் குணமடைந்துவிடுவார்கள். ஆனால், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பதால் அச்சம் தேவையில்லை" என்று அவர் கூறினார்.

எப்படிப் பரவும்
ஆர்த்தோபாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைரசால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே மங்கி பாக்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வழியாகவே இந்த நோய் பரவுகிறது. இப்போது கண்டறியப்படும் பல வழக்குகள் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கே பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications