அடி தூள்! ஜனவரி 6ம் தேதி அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்: மாரத்தான் ஓடுபவர்கள் இலவசமாக பயணிக்கலாம்!
சென்னை: சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வரும் 6ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் பங்கேற்பாளர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு வருகின்ற 06.01.2024 மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் QR குறியீடு போடப்பட்ட அட்டையை பயன்படுத்தி, 6ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ இரயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சிறப்பு QR குறியீடு பதியப்பட்ட பயணஅட்டையை பயன்படுத்தி 06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ இரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த QR குறியீடை பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

வழக்கமான மெட்ரோ இரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications