கள்ளக்குறிச்சி விவகாரம்.. அரசை பின்பற்றிய தனியார் பள்ளிகள் - பின்வாங்கிய மெட்ரிக் பள்ளிகள் சங்கம்
சென்னை: மாணவி உயிரிழந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப்பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

தாக்குதல்
இந்த நிலையில் 4 வது நாளான நேற்று சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர்.

144 தடை
போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்கள் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நயினாய் பாளையம் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பலர் கைது
இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 108 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகள்
பள்ளி கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று முதல் காலவரையின்றி மூடப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்து இருந்தார். ஆனால், மூடப்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்தது. இதனை தொடர்ந்து இன்று 91 சதவீத பள்ளிகள் இன்று இயங்கியதாகவும் இயங்காத பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் பள்ளிகள் மூடப்படும் என்ற அறிவிப்பை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications