ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.. புது ரூட்டை கையில் எடுக்கிறதா?.. விழிக்கும் கூட்டணிகள்..!
மேயர் தேர்தல் குறித்த முக்கிய தகவல்கள் கசிந்து வருகின்றன
சென்னை: விரைவில் நடக்க போகும் நகராட்சி தேர்தலுக்கு திமுக மா.செ.க்கள் முழு வீச்சில் களமிறங்கி உள்ளனர்.. எனினும் இந்த தேர்தலில் கூட்டணிகளுக்கான பங்கு என்ன என்பது தெளிவாக இதுவரை தெரியவில்லை..!
தமிழகத்தில் விரைவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் நடக்க உள்ளது.. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
ஆனால், அதன்பிறகு எடப்பாடி முதல்வராக இருந்தபோது மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடு நடத்தப்பட்டது.. ஆனால் அதற்குள், கொரோனா தொற்று பரவல் வந்துவிட்டதால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்த முடியாமல் போய்விட்டது.

குழப்பம்
இப்போது திமுக அரியணை ஏறி உள்ளது.. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலும் நடக்க போகிறது.. ஆனால், நேரடி தேர்தலா? மறைமுக தேர்தலா என்பதில் குழப்பம் துவங்கியது.. தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தல் நடைமுறையே இருக்கிறது என்றாலும், இதை திமுக அரசு மாற்றிவிடுமோ என்ற கலக்கமும் உள்ளது.. திமுக நிர்வாகிகள் மத்தியிலே உள்ளதாக தகவல்கள் கசிந்தன.

வாக்காளர்கள்
காரணம், மறைமுகத் தேர்தல் நடந்தால் கவுன்சிலர்களை பணத்துக்காக கட்சி மாறி வாக்களித்தால் என்ன செய்வது என்ற குழப்பத்தினால்தான், நேரடியாக போட்டியிட்டே மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக நிர்வாகிகள் ஒரு தரப்பில் சொல்கிறார்கள்.. கட்சித் தலைமை சொன்னால், கவுன்சிலர்கள் கட்டுப்பாடாக வாக்களித்து தலைவர் பதவிகளை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்று இன்னொரு தரப்பில் நினைக்கிறார்களாம். இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான தகவல் கசிந்து வருகிறது..

யோசனை
நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதுடன், ஓட்டுப்பதிவினையும் 2 கட்டமாக நடத்த தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது... ஒருவேளை அப்படி அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்பட்டால் திமுக வேறு ஒரு ரூட்டை யோசிக்கிறதாம்.. மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடியாகவே இறங்கினால் சரியாக இருக்குமே? எதற்காக கூட்டணி கட்சியினரை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர்களுக்கு பதிலாக சொந்த கட்சியினருக்கு உள்ளாட்சி தலைவர்களுக்கான பதவிகளை வாய்ப்புகளை தந்தால், அது கட்சியின் பலத்தை பெருக்குமே என்ற யோசனையில் உள்ளதாம்..

கூட்டணி
ஒருவேளை கூட்டணிக்கு அதிக வாய்ப்புகளை தந்துவிட்டால், அது அதிமுகவுக்கு பலமாக போய்விடும் என்றும் திமுக கருதுவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்தப்பட்டால் யாரை மேயர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி உருவாகலாம்... இதுவே மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் இந்த பிரச்சினைக்கு இடம் இருக்காது என்று திமுக கணக்கு போடுகிறது.

அதிமுக
ஆனால், கூட்டணி கட்சிகளோ, நேரடி தேர்தலைதான் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.. ஒருவேளை மறைமுக தேர்தல் என்றால் திமுக என்ன கொடுக்கிறதோ, அதை பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கும் கூட்டணிகள் தள்ளப்படலாம் என்று தெரிகிறது. எதுவானாலும் அடுத்த சில தினங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், திமுக பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டால், அதிமுகவும் பதிலுக்கு முழு பலத்தை காட்ட தயாராகி கொண்டிருக்கிறது..!

மறைமுக தேர்தல்
எப்படிப்பார்த்தாலும், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது மிகப்பெரிய வாய்ப்பாகும்.. காரணம், நமது நாட்டிலேயே அதிகமான நகர்ப்புற கட்டமைப்பை கொண்ட மாநிலம் தமிழகமாகும்.. சுமார் 53 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்... 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்களில் 3 கோடியே 28 லட்சம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.. அதனால்தான், மாநகராட்சி மேயர் என்பது கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கிறது... அந்தவகையில், மீண்டும் மறைமுக தேர்தலே கொண்டு வரவும் வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது... பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications