"மெகா கூட்டணி".. அடித்து பேசிய எடப்பாடி.. இணைய போகும் "அந்த" 4 கட்சிகள்.. அப்போ திமுக? ஆஹா ட்விஸ்ட்
சென்னை: அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என்று நேற்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக கூட்டணியில் இருந்து பெரும்பாலான கட்சிகள் வெளியேறிய நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி குறித்து பேசி இருக்கிறார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாடு கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. லோக்சபா தேர்தலை மனதில் வைத்து மத்திய அமைச்சர்கள் 70 பேரை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் திட்டத்தில் மத்திய பாஜக களமிறங்கி உள்ளது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலும் திமுக கொங்கு மண்டலத்திலும், தென் மண்டலத்திலும் லோக்சபா தேர்தலுக்கான களப்பணிகளை தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக மட்டுமே தேர்தல்கள் மீது கவனம் செலுத்தாமல் உட்கட்சி மோதலில் சிக்கி திணறி வந்தது.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான உட்கட்சி மோதல் நிலவி வருவதால் அக்கட்சி தேர்தல், கூட்டணி தொடர்பான அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தது.

எடப்பாடி பேச்சு
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல்லில் நடந்த கூட்டம் ஒன்றில் திடீரென அதிமுக கூட்டம் குறித்து பேசினார். அதில், நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம்.

திராணி இல்லை
எங்களை நேரடியாக எதிர்க்க தெம்பு, திராணி இல்லாமல் வழக்கு போடுகிறார்கள். அடுத்து வருகின்ற எந்த தேர்தல்களாக இருந்தாலும், அதிமுகதான் வெல்லும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக, நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம். அதிமுக தலைமையில் இந்த மெகா கூட்டணி அமைக்கப்படும். அதற்கு பிள்ளையார் சுழி போடும் கூட்டமாகவே இந்த கூட்டம் இருக்கும், என்று எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

கவனம்
அதிமுக உட்கட்சி மோதலுக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி இப்படி முதல்முறையாக கூட்டணி குறித்து பேசி இருக்கிறார். மெகா கூட்டணி அமைப்போம், அதுவும் அதிமுக தலைமையில் அமைப்போம் என்று பேசி இருக்கிறார். அதிமுகவில் இருந்து கடந்த ஒவ்வொரு தேர்தல்களாக பல்வேறு கட்சிகள் வெளியேறின. சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதன்பின் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னர் பாமகவும் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

அதிமுக கூட்டணி
இதனால் அதிமுகவின் கூட்டணி சிறிய அளவில் சுருங்கியது. ஆனால் திமுக கூட்டணியோ விசிக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ மற்றும் பல சிறிய கட்சிகள் என்று வலுவாக இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறியுள்ளார். பாமக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி இப்படி பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்கவும் அதிமுக முயலும் என்கிறார்கள்.

இணைய வாய்ப்புகள் கட்சிகள்
திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே, அவர்களின் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. அதோடு திமுகவை ஆங்காங்கே விமர்சனம் செய்தும் ஐஜேகே பாரிவேந்தர் பேசி வருகிறார். இதனால் ஐஜேகே அதிமுக கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாமக,தேமுதிக , பாஜக, ஐஜேகே ஆகியவை ஒன்றாக கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மற்றபடி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரும்பாலும் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இல்லை.

திமுக
முன்னதாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய அரசியல் நிலவரப்படி காங்கிரஸ் கட்சி திமுகவின் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் குறைவு. பெரும்பாலும் பாஜக - அதிமுக கூட்டணியே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் போக மெகா கூட்டணி என்று எடப்பாடி அறிவித்து இருப்பதால்.. அமமுக, மநீம போன்ற கட்சிகளுடனும் அவர் கூட்டணி வைக்க முயல்வாரோ என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.












Click it and Unblock the Notifications