மீம்ஸ் மழையில் நிர்மலா.. பஞ்சர் செய்யும் நெட்டிசன்ஸ்.. கொதித்து எழுந்த சீமான்
சென்னை: பாப்கார்னுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தாலும் சமூக ஊடகங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றிய மீம்ஸ் தீயாகப் பரவி வருகின்றன.
இந்தியா முழுக்க உள்ள நெட்டிசன்களின் மீம்ஸ் கண்டெண்ட் ஆக மாறி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற 55 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தியேட்டர்கள் பாப்கார்னுக்கு 18% வரி போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதில் பாக்கெட் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் உதிரியாக விற்கப்படும் பாப்கார்னுக்கு 5% வரி விதிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து நிதியமைச்சர் மீம்ஸ் பிரியர்களின் விருப்பத்திற்குரியவராக மாறினார்.

ஆனால், பாப்கார்ன் வரி உயர்த்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தப் பாப்கார்ன் வரி விவகாரம் அப்படி இருந்தும் அமைதியாகவில்லை. பலர் அன்னை தெரசா படத்தை ஆங்கிலத்தில் மதர் தெரசா என்றும் அவர் பக்கத்திலேயே மதர் டேக்ஸா என்றும் மீம் போட்டு விமர்சித்து வருகின்றனர். அதே போல் பச்சை வாழைக் காய்க்கு ஒரு வரி, அதே பழமானால் ஒரு வரி என்றும் மீம் போட்டுள்ளனர்.

பிரபல யூடியூபர் துருவ் ரத்தீ நிர்மலா சீதாராமன் வரிக் கொள்ளை என்று குறிப்பிட்டு ஒரு டீ- ஷர்ட்டை ஷேர் செய்துள்ளார். அதேபோல் செஸ் வீரர் குகேஷ் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு 11 கோடி பரிசாகக் கிடைத்தது. அதில் பாதியை அவர் வரியாகக் கட்டிவிட்டு விடுவார் என்று பலர் கிண்டல் செய்தனர். சிலர் பாப்கார்ன் முழுக்க தங்கக் காசுகளாக மாறி இருப்பதாகவும் அதன் மீது நிதியமைச்சர் உட்கார்ந்திருப்பதாகவும் மீம் போட்டுச் சந்தோசப்பட்டுக் கொண்டனர்.

இதில் உச்சக்கட்டமாக ஒரு மீம் பலரது கவனத்தை ஈர்த்தது. இனிமேல் மீம் கிரியேட்டர்களுக்கும் வரி விதிக்கப்படலாம் என்று ஒருவர் கார்ட்டூன் போட்டு நிதியமைச்சரை கலாய்த்திருக்கிறார். சமூக ஊடகங்களைக் கடந்து அவரது கட்சி தலைவர் ஒருவரே ஜிஎஸ்டி வரியை ஒழிக்க வேண்டும் என பேசியதுதான் ஹைலைட்.
ஜிஎஸ்டி வரி பற்றிப் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "ஒரே நாடு ஒரே தேர்தல் வராது. அதற்காக யாரும் பயப்பட வேண்டாம். இந்த ஜிஎஸ்டி முறையை முதலில் ஒழிக்க வேண்டும். அதை அவசரமாக கொண்டுவந்துவிட்டார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றும் தெரியாது. அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை அவர் அப்படியே படிக்கிறார்.

ஜிஎஸ்டி பற்றிப் பேசி சீமான், ஒருவர் ஒரு காரை வாங்கி இருப்பதாகவும் அதன் விலை 13 லட்ச ரூபாய். ஆனால், அதற்காக வரி மட்டும் 15 லட்சம் கட்டி இருக்கிறேன் என ஒரு பதிவைப் போட்டிருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். பாப்கார்னுக்கு வரி போட்டு இருக்கிறார்கள் எனப் பலரும் கவலைகொள்கிறார்கள். அதைவிட ஒருவிசயம் பார்வையற்றவர்கள் எழுதிப் படிக்கும் காகிதத்திற்குக்கூட வரி போட்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை?

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 3 சக்கர வாகனத்திற்கு வரி, காது கேட்காதவர்கள் பயன்படுத்தும் கருவிக்கு வரி. தங்க பிஸ்கெட்டிற்கு 3%தான் வரி. அதை விதிக்கலாமா வேண்டாமா என்று 3 நாட்கள் விவாதம் நடந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இங்கே பாப்கார்னைவிட பல கொடுமைகள் இருக்கின்றன. எதற்கு வேண்டுமானாலும் வரி போடுங்கள். அந்த வரி வருவாய் திரும்ப என் மாநிலத்திற்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா என்பதையாவது சரியாகச் சொல்லுங்கள்?" என்று நியாயம் கேட்டிருக்கிறார் சீமான்.












Click it and Unblock the Notifications