நடு வழியில் நின்ற சென்னை ரயில்.. நள்ளிரவில் தவித்த பயணிகள்! ஏற்காடு எக்ஸ்பிரசை கவிழ்க்க சதியா?
ஈரோடு: தண்டவாளத்தில் 10 அடிநீள இரும்பு கம்பி கிடந்ததால் சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரயிலை கவிழ்க்கும் சதியுடன் தண்டவாளத்தில் கம்பி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 9 மணிக்கு இந்த ரயில் ஈரோட்டில் இருந்து புறப்படும். அந்த வகையில், நேற்று இரவு வழக்கம் போல ஈரோட்டில் இருந்து கிளம்பியது. சென்னை நோக்கி வந்த இந்த ரயில், சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு இரவு 9.27 மணிக்கு சென்றது.

10 அடி நீள கம்பி
அங்கு பயணிகள் ஏறிய பிறகு 9.33 மணிக்கு சேலத்திற்கு கிளம்பியது. ரயில் மகுடஞ்சாவடி பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது தண்டவாளத்தில் இரும்பு கம்பி கிடந்ததாக தெரிகிறது. இதனால் என்ஜின் டிரைவருக்கு சத்தம் கேட்டுள்ளது. உடனே என்ஜின் டிரைவர் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்துக்கு சுமார் 2 கி.மீ. முன்பாக நடுவழியில் ரயிலை நிறுத்தினார்.
நடந்த சம்பவம் குறித்து என்ஜின் டிரைவர் உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்தனர். நிகழ்விடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீளமுள்ள இரும்பு கம்பி கிடந்தது.
ரயில்வே போலீசார் விசாரணை
இதையடுத்து, ரயிலை கவிழ்க்க எதுவும் சதி நடந்ததா? என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில்வே தண்டவாளத்தில் இவ்வளவு பெரிய இரும்பு கம்பியை வைத்தது யார்? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்ட சம்பவத்தால் நடு வழியில் நிறுத்தப்பட்ட ரயில், 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதாவது, இரவு 11.40 மணியளவில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. மகுடஞ்சாவடி ரயில் இந்நிலையத்தில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் ஆகியும் ரயில் மகுடஞ்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மற்ற ரயில்களும் தாமதமானது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ரோந்து பணியை தீவிரப்படுத்த
சமீப காலமாக ரயில் தண்டவாளங்களில் இரும்பு கம்பிகளை வைப்பது, டயர்களை வைப்பது போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருவது பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களால் ஏதேனும் விரும்பத்தாக நிகழ்வுகள் ஏற்பட்டு விடும் அபாயம் இருக்கிறது.
எனவே ரயில்வே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தற்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தண்டவாள பகுதியில் அத்துமீறும் நபர்களை பிடித்து கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications