பால் விலை உயர்வுக்கு அவசியம் ஏற்படாது... முதல்வருக்கு வேண்டுகோள்
சென்னை: ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமலேயே பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும் என்று தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நேற்று (05.07.2019) பால் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் "பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் நுகர்வோருக்கான விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும்" எதிர்க்கட்சிகளுக்கு சம்மதமா..? என திருப்பி வினா எழுப்பியுள்ளதோடு "நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்குள் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் "ஆவின் பால் விற்பனை விலையும் உயர்த்தப்படும்" என்பதை முதல்வர் அவர்கள் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடியும் என்கிற முதல்வரின் தவறான கூற்றை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, பால்வளத்துறை சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
ஏனெனில் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கிய போது ஆவின் பால் விற்பனை விலை அப்போது உயர்த்தப்படவில்லை என்பதையும், அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5.00ரூபாய் மீண்டும் உயர்த்தி வழங்கிய போது "குருவி தலையில் பனங்காய்" வைத்த கதை போல ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 10.00ரூபாய் உயர்த்தி பொதுமக்களுக்கு கடுமையான சிரமத்தை அளித்ததையும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
மேலும் பொதுமக்கள் பாதிக்கின்ற வகையில் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமலேயே தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட இயலும்.
எப்படியெனில் ஆவின் நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் மாதாந்திர அட்டை, மொத்த விநியோகஸ்தர், ரொக்க விற்பனை என மூன்று விதமான விலை நிர்ணயத்தால் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 80கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அதனை ரத்து செய்து ஒரே விலை நிர்ணயத்தை நடைமுறைபடுத்துவது, பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்புகளை வழங்குவது, அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை இரும்புக் கரம் கொண்டு அறவே தடுப்பது, அதிக செலவினங்களை ஏற்படுத்தும் வெளிநாடுகளில் ஆவின் பால் விற்பனை செய்யும் நடைமுறையை (மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் என கடல் கடந்து) தவிர்த்து ஆவின் பால் விற்பனையை தமிழகத்தில் அதிகப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயல்களை செய்வது போன்றவற்றை நடைமுறைபடுத்தினாலே ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டும்.
அப்படி ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தை ஈட்டும் போது சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கின்ற வகையிலான ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதல்வர் அவர்கள் கேட்டுக் கொண்டால் ஆவின் நிறுவனத்தை இழப்பின்றி செயல்படுத்த அனைத்து வகையான ஒத்துழைப்பையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வழங்கிட தயாராக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.