ஆல் இஸ் வெல்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்பில் மகேஷ்
சென்னை: தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அன்பில் மகேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ். இவர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பணிகளில் மாவட்ட வாரியாக அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், அன்பில் மகேஷ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, காஞ்சிபுரம், வாலஜாபாத், உத்தரிமேரூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதோடு ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். ஆய்வுகளை முடித்த பின்னர் அன்பில் மகேஷ் காரில் சென்னை நோக்கி திரும்பினார். இந்நிலையில், அன்பில் மகேஷுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்பில் மகேஷ் உணவு சாப்பிட்டபோது திடீரென்று ஒவ்வாமை ஏற்பட்டு, ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அமைச்சரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அமைச்சருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மருத்துவ சிகிச்சையில் உள்ள அன்பில் மகேஷ் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நிலை பூரண குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications