மகாவிஷ்ணு உடன் பழக்கம்? போட்டோ வேற இருக்கே.. கிளம்பிய புது சர்ச்சை.. அமைச்சர் அன்பில் மகேஷ் பரபர
சென்னை: அசோக் நகரில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்ற நபர் பிற்போக்குத்தனமான கருத்துகளை கூறியது சர்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் எடுத்த போட்டோ இணையத்தில் பரவி சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக அவரே முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை ஊக்கமளிக்க மொடிவேஷ்னல் பேச்சு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் மகாவிஷ்ணு என்ற நபர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் முன்ஜென்மம் பாவ புன்னியம் குறித்து எல்லாம் பேசினார். மாற்றுத்திறனாளிகள் குறித்தும் சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். அதை அங்கிருந்த அனைவரும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தனர்.
மகாவிஷ்ணு: இருப்பினும், தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், சங்கரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்யவே மகாவிஷ்ணு தனது சர்ச்சை பேச்சை தொடர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதற்கிடையே அதே பள்ளிக்கு இன்று சென்ற அன்பில் மகேஷ் மாணவர்களிடையே பேசினார். தமிழ் ஆசிரியர் சங்கரை மேடைக்கு அழைத்துப் பாராட்டிய அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேநேரம் சர்ச்சையை கிளப்பிய மகாவிஷ்ணு என்ற நபர் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் எடுத்த போட்டோவும் இணையத்தில் வேகமாக பரவியது.
அன்பில் மகேஷ்: இதுவும் சர்ச்சையான நிலையில், இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷே செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு சிலர் கேட்கிறார்கள். அவர் எல்லா அமைச்சர்களையும் பார்த்துள்ளார். அமைச்சராக ஒரு நாளைக்கு 100 பேர் என்னை சந்திக்க வருகிறார்கள். ஒவ்வொருவரும் என்னுடன் வந்து ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எந்த நோக்கத்துடன் ஃபோட்டோ எடுக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார் என்பதற்காக அனுமதி தர வேண்டும் என்றெல்லாம் இல்லை.

கொள்கையில் சமரசம் இல்லை: இங்கே திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. எந்தவொரு விதத்திலும் கொள்கையில் சமரசம் செய்யாத வகையில் ஆட்சி செய்து வருகிறோம். தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் கூட, கொள்கையை சமரசம் செய்ய மாட்டோம் என்பதாலேயே மத்திய அரசின் நிதியை கூட பெறவில்லை. எனவே, ஒரு போட்டோவை வைத்து இதை கேட்காதீர்கள்.
மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளரை அழைத்து வருவதில் தவறு இல்லை. ஆசிரியர்கள் நல்லெண்ணத்தில் கூட அதை செய்யலாம். ஆனால், பேச்சாளராக வருபவரின் பின்புலத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அவரது பேக்கிரவுண்ட் என்ன, இதற்கு முன்பு என்ன மாதிரியான உரைகளை நடத்தி இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டே அழைத்து வந்திருக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மீது தவறு இருக்கிறது. அடிப்படை காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். இவருக்கு அனுமதி கொடுத்தவர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications