திருமாவளவன் சுயமரியாதைக்காரர்.. அழுத்தம் கொடுத்தால் செய்யக்கூடிய ஆள் கிடையாது! - அன்பில் மகேஷ்
சென்னை: புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காததற்கு காரணம் கூட்டணி கட்சியின் அழுத்தம் என்று விஜய் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், திருமாவளவன் சுயமரியாதைக்காரர், அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்னரே, புத்தக வெளியீட்டில் அவர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. விஜய் மட்டுமல்லாது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு, அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், திமுக குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, திமுக கொடுத்த அழுத்தத்தால்தான் திருமா இதில் பங்கேற்கவில்லை என்று பரவலாக பேசப்பட்டது. இந்த சலசலப்புகளுக்கு நடுவேதான் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
இதில் பேசியிருந்த விஜய், "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது, "விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் திமுக அல்ல. அரசியல் அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை" என்று விளக்கமளித்திருந்தார்.
விசிக எம்பி ரவிக்குமாரும், "விஜய் கட்சியை தொடங்கியதே எங்களுடன் கூட்டணியை வைக்கத்தான் போல இருக்கிறது. தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து 'அழைப்பு' விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய்யை கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள். 'விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே' என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துருவிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது" என்று விஜய் கருத்துக்கு விமர்சனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் கருத்து குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், "திருமாவளவன் சுயமரியாதைக்காரர். அப்படியெல்லாம் அழுத்தம் கொடுத்து அவரை வேலை செய்து வைத்துவிட முடியாது. அவர் மிகப்பெரிய தலைவர் அவரை மதிக்ககூடியவராகதான் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் விஜய்யின் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications