"அமைச்சர் துரைமுருகன் ஆரோக்கியமாக உள்ளார்!" மகன் கதிர் ஆனந்த் தகவல்
சென்னை: அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை தொடர்பாகச் சமூகவலைத்தளங்களில் பரவிய தகவலை அவரது மகன் கதிர் ஆனந்த் மறுத்துள்ளார்.
திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் நேற்று (மார்ச் 29) துபாய் செல்வதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்தச் சூழலில் அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை தொடர்பாகப் பரவிய தகவலை அவரது மகன் கதிர் ஆனந்த் மறுத்துள்ளார்.
இது தொடர்பாகக் கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்பொழுது ஊடகங்களில் ஒரு பொய்ச் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய் செய்தியாகும்.
என் தந்தையார் துரைமுருகன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வீட்டில் இருக்கிறார். அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. இந்த பொய் செய்தி ஒரு வதந்தி, யாரும் நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications