அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..!
சென்னை: வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமாகிவிட்டார்.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே காவேரி மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் அமைச்சர் துரைக்கண்ணு மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறியிருந்தது. மேலும், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவேரி மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு சென்றிருந்தார். இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் முடியவில்லை.

சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் கொண்டு செல்லப்படுமா அல்லது கொரோனா கால சுகாதாரத்துறை விதிகளின் படி சென்னையிலேயே உடல் அடக்கம் செய்யப்படுமா என்ற விவரம் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications