'இனமானம் காத்த பெரியாருக்காக.. ஆட்சியை துறக்க தயாராக இருந்தவர் கருணாநிதி..' துரைமுருகன் உருக்கம்
சென்னை: பெரியார் பிறந்த நாளை சமூக நிதி நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதை வரவேற்ற அமைச்சர் துரைமுருகன் பெரியாரின் பொன்மொழிகள் அனைவரது வீடுகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பெரியாரின் கருத்துகள் அனைத்து பாடப் புத்தங்களிலும் இடம் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இன்று அவையில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்தியா முழுமைக்கும் சமூக நீதி பாடம் எடுத்து, சுயமரியாதை கருத்துக்கள் நாடு முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். இதனால் அவரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும். செப்டம்பர் 17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் என்று கூறினார்.

பெரியார் தான் காரணம்
இதைத் தொடர்ந்து பேசிய மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகன், "முதல்வர் ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கு சட்டசபையில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். காரணம் பெரியார் வழியிலேயே தான் நாம் இங்கு அமர்ந்திருக்கிறோம். வைத்தியலிங்கம் கூறியதைப் போலப் பெரியாரால் தான் நான் இங்கு அமர்ந்திருக்கிறோம். பெரியார் இல்லையென்றால் யார் இங்கு இருப்பார்கள் என்பதை சுதந்திரத்திற்கு முன் இருக்கும் சட்டசபையை எடுத்துப் பார்த்தால் நமக்குத் தெரியும். அதெல்லாம் இப்போது மாறியுள்ளது என்றால் அதற்குக் காரணம் பெரியார் தான்.

ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை
அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமணம் குறித்த சட்ட வரைவைச் சட்டசபையில் தாக்கல் செய்த போது, அங்கிருந்தவர்கள் இது பெரியாருக்காகவா? எனக் கேள்வி எழுப்பினர். அப்போது முதல்வராக இருந்த அண்ணா, இந்த ஆட்சியே பெரியாருக்குத் தான் காணிக்கை எனக் குறிப்பிட்டார். அதேபோல பெரியார் மறைந்த போது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கருணாநிதி விரும்பினார். ஆனால், அப்போது தலைமைச் செயலாளராக இருந்தவர் பெரியார் எந்தவொரு அரசு பதவியிலும் இல்லை என்பதால் அவருக்கு எப்படி அரசு மரியாதை அளிக்க முடியும் என்ற கேட்டார்.

அரசு மரியாதை
அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்து கருணாநிதி, மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்தார் என்பதற்காக அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது எனக் கேட்டார். மேலும், இதனால் தனது ஆட்சி கலைக்கப்படுகிறது என்றால், 'பெரியாருக்காக இந்த ஆட்சியைக் கருணாநிதி தூக்கி எரிந்துவிட்டுப் போவேன்' என்று சொன்னார் கருணாநிதி. அதன் பிறகே பெரியாருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி வழியில் அதே சுயமரியாதை உணர்வுடனும், திராவிட கொள்கையுடனும் இந்த தீர்மானத்தை முதல்வர் படித்தபோது எனக்கு நெஞ்சம் விம்பி போய்விட்டது. எனது உடலில் ரத்தம் புது வேகத்தில் பரவ தொடங்கியது. இனி திராவிட இயக்கத்தை யாராலும் அளிக்க முடியாது, இனி பல தலைமுறைகள் கடந்தும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது
உலகத்தில் தோன்றிய பல இனங்கள் சில நூறு ஆண்டுகளிலேயே அழிந்துவிட்டன. ஆனால், இந்த திராவிட இனம் மட்டும் இன்னும் சற்று வலிமையுடன் இருக்கிறது என்றால் அதற்குப் பெரியார் இட்ட அடித்தளமே காரணம். பெரியார் கடவுள், சாதி, மதம் ஆகியவற்றை எதிர்த்தார். ஆனால் அதேநேரம் இந்த திராவிட இனத்தையும் கட்டிக்காத்தார். இந்த திராவிட இயக்கத்தை வெளியாட்கள் யாராலும் அழிக்க முடியாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

இட ஒதுக்கீடு
இந்திய அரசியலமைப்பில் முதல் சட்டத் திருத்தம் பெரியாரால் தான் மேற்கொள்ளப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் தனக்கான இடம் மறுக்கப்பட்டதாகப் பெண் ஒருவர் தொடுத்த வழக்கில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதய எதிர்த்து அண்ணாவின் துணையுடன் பெரியார் நடத்திய போராட்டத்தில் தான் முதல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இச்சத்த திருத்தத்தின் மூலம் தான் இப்போது 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் பெரியாருக்குத் தனி இடம்
பெரியாரின் பொன்மொழிகளை நாம் படிக்கத் தவறுகிறோம். இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அடுத்த வரும் தலைமுறை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், பெரியாருக்கு என ஒவ்வொரு வீடுகளிலும் தனி இடத்தை ஒதுக்குங்கள்.

பாடபுத்தங்களில் பெரியார் கருத்து
அதேபோல சுயமரியாதை கருத்துகள் நமது படப்புத்தங்களில் இடம்பெற வேண்டும். அதில் என்ன தவறு. மனிதர் பகுத்தறிவுடன், மானத்துடன், சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என அதில் கூறப்படுகிறது. இதில் என்ன தவறு? சுயமரியாதை இல்லாதவர், மானம் இல்லாதவர் இதனை எதிர்க்கட்டும். இதை அரசு செய்ய வேண்டும் என முதல்வருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். பெரியாருக்கு பிறகும் திராவிட கழகத்தை கட்டிக்காக்கும் வீரமணிக்கு இந்த அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

உயர்ந்து இருக்கிறீர்கள்
நீங்கள் கருணாநிதி வழியில் செயல்படுவதாகவே முதலில் நான் நினைத்தேன். ஆனால், பிறகு அண்ணா வழிக்குச் சென்றீர்கள். இப்போது பெரியார் வழிக்கே சென்றுவிட்டீர்கள். வயதில் நீங்கள் என்னைவிட இளையவர் தான். ஆனால் அனுபவத்தில் சமூக தொன்றில் என்னைவிட உயர்ந்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications