சாலையோர வசதி மையம்! பள்ளங்களற்ற சாலை! டிராவல் விரும்பிகளுக்காக அமைச்சர் எவ வேலு அசத்தல் அறிவிப்பு!
சென்னை: சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும் என அமைச்சர் எவ வேலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஓட்டுநர்கள் புத்துணர்வு பெறுவதற்காக சாலையோர வசதி மையங்கள் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எவ வேலு விடுத்துள்ள அறிவிப்புகள் வருமாறு;

சாலையோர வசதி மையங்கள்
முதலமைச்சரின் பொன்னான திட்டங்களில் ஒன்றான "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.1093 கோடி மதிப்பில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ஓட்டுநர்கள் புத்துணர்வுடன் பயணத்தைத் தொடர்வதற்கு வசதியாக அதிக வாகனப் போக்குவரத்து உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் "சாலையோர வசதி மையங்கள்" 3 இடங்களில் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் அமைக்கப்படும்.

எல்லா வசதிகளும்
சாலையோர மையங்களில், கனரக வாகனங்கள், பேருந்துகள், மற்றும் சீருந்துகளுக்கான வசதி தனித்தனியே வாகன நிறுத்தும் இடங்கள், ஓட்டுநர்கள்
ஓய்வெடுக்கும் அறைகள், முதலுதவி மையம், உணவகம், எரிபொருள் நிலையம், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM), கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா, குழந்தைகள் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கம், வாகனம் பழுது பார்க்கும் வசதி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

பள்ளங்களற்ற சாலை
சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தடையற்ற போக்குவரத்திற்கு பள்ளங்களற்ற சாலைகளை மக்களுக்கு வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. பள்ளங்களை உடனுக்குடன் கண்டறிவதில் பொது மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. பள்ளங்கள் உள்ள சாலை பகுதிகளை தங்கள் கைப்பேசி முலம் புகைப்படம் எடுத்து செயலியில் (Mobile App) பதிவேற்றம் செய்யும் வகையில் கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும்.

24 மணி நேரத்தில் சீரமைப்பு
சாலைகளில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணிநேரத்திலும், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளில் 72 மணிநேரத்திலும் சரி செய்யப்படும். மேலும், சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறாக "பள்ளங்களற்ற சாலைகள்" என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத்துறை முன்னேறி செல்லும்.












Click it and Unblock the Notifications