நள்ளிரவில் திடீர் ஆய்வு.. "தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு".. எ.வ.வேலு நம்பிக்கை!
சென்னை: சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு திடீரென நள்ளிரவில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அவை முழுமை பெறாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் 80 சதவிகிதம் முதல் 90 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்சார இணைப்பு, டெலிபோன் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, இணையதள கேபிள்கள் என பல்வேறு திட்டங்கள் பூமிக்கு அடியில் செய்யப்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால் பணிகள் முடிய தாமதமாகியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள்
மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவ்வப்போது பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் தனித்தனியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் எ.வ.வேலு ஆய்வு
அந்த வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நள்ளிரவில் மழைநீர் வடிகால் பணிகளை திடீரென ஆய்வு மேற்கொண்டார். சென்னையின் வால்டக்ஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், மின்சார இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் என பூமிக்கு அடியில் பல்வேறு இணைப்புகள் உள்ளது. இவற்றை சரிசெய்துகொண்டே, மழைநீர் வடிகால் பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தீபாவளிக்குள் நிறைவு
பகல் நேரங்களில் வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு செய்ய முடியாது. அதனால் தான் இரவு நேரங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்தத்தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பொறியாளர்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதனால் மழை வருவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

எ.வ.வேலு நம்பிக்கை
தொடர்ந்து தீபாவளிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெறுமா என்ற கேள்விக்கு, தீபாவளிக்கும் அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக தான் இரவு நேரங்களிலும் பணிகளை பார்வையிட்டு வருகிறோம். அமைச்சரே நேரடியாக பணிகளை வந்து பார்க்கிறபோது, பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஊழியர்களுக்கு கிடைக்கும். ஆய்வு என்ற பெயரில் இரண்டு இடங்களில் பார்த்து செல்வதற்காக வரவில்லை. தீபாவளிக்கும் முன் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications