கொரோனா வந்தும் கமல்ஹாசன் நல்லாயிருக்குறதுக்கு காரணமே ரெண்டு தடுப்பூசிதான்.. மா. சு தகவல்!
சென்னை: நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்டமசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தெரிவித்ததாக, அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தென்ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான முனையத்தில் செய்யப்படும் பரிசோதனைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மா சுப்பிரமணியன்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிதாக உருமாறிய கொரோனா அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டு ஓமிக்கிரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், உலக நாடுகள் சில முழுவதும் ஓமைக்ரான் இருந்து தற்காத்துக்கொள்ள விமானங்களுக்கு தடை விதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகள்
மேலும், சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RT PCR பரிசோதனையும், காய்ச்சல் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக வருபவர்களையும், பல நாடுகளுக்கு சென்று வருபவர்களை கண்காணிக்க உள்ளதாகவும் கூறினார்.

விமான நிலையம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் உதவி திட்ட அலுவலர் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று முதல் நியமிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், சவுத் ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களையும் கண்காணித்து பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடவடிக்கைகள்
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஏற்கனவே வந்த 55,090 நபர்களுக்கு பரிசோதனைகளில் 3 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், பெரும் பகுதியானவை டெல்டா வைரஸ் தொற்றாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொற்று பாதிப்பு
தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், தொற்று பாதிப்பு வருகிறது, முழுமையாக தொற்று நீங்கவில்லை, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தீவிர கண்காணிப்பு இனி வரும் காலங்களில் அவசியம் என்பதால் மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், தடுப்பூசி முககவசம் மட்டுமே எதிர்காலத்தில் காக்கக்கூடிய ஆயுதங்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இரண்டு தவணை
நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 12வது மெகா தடுப்பூசி முகாம் நடைப்பெற உள்ளதாக கூறியதோடு, அதிகளவில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும், இன்னும் 12 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாகவும் கூறினார். கமல்ஹாசன் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் கொரோனா தொற்றிலும் நலமாக உள்ளதோடு, விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

விலக்கு
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறிய அவர், நீட் தேர்வு விலக்கு குறித்து ஆதரவு அளிக்க 12 மாநில முதல்வருக்கு, முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான சட்டமசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications