"திமுகவுடன் இணைந்து பாஜகவும் குரல் கொடுக்கணும்.." எதற்காக சொல்கிறார் அமைச்சர் மா.சு.. பரபர பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக அமைச்சர் மா.சு தீவிரமாகப் பிரசாரம் செய்தார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வாக்குப்பதிவு வரும் பிப். 19, சனிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல்
கடந்த சட்டசபைத் தேர்தலில் அமைத்த அதே கூட்டணி உடன் இந்த முறை திமுக களமிறங்குகிறது. அதேபோல அதிமுகவுக்கும் கிட்டதட்ட தனித்தே களமிறங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ள போதிலும், அதில் தலைநகர் சென்னை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வரலாற்றிலேயே முதல்முறையாகச் சென்னை மாநகராட்சி இந்த முறைப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை
சென்னையில் 200 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 150க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சென்னையில் மிகத் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தரமணி சோழமன்னன் தெரு, மற்றும் எல்பி சாலை பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம் செய்தார்.

100% வெற்றி
அப்போது பேசிய அவர், "கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்குப் பொதுமக்கள் மிகப் பெரியளவு அங்கீகாரம் கொடுத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இப்போது நாங்கள் பிரசாரம் செய்யச் செல்லும் போதே, மக்கள் ஆதரவு சிறப்பாக இருக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 100% வெற்றி பெறும். அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதிமுக மீது அட்டாக்
வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைத் தேர்தலிலும் நடைபெறும் என்று ஓபிஎஸ் கூறுகிறார். முதலில் அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெல்லட்டும். அதன் பிறகு ஆட்சி அமைப்பது குறித்துப் பார்த்துக் கொள்ளலாம்" என்றார். திமுக அல்வா கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது தொடர்பாகப் பேசிய அவர், "நீரையே ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோலை பயன்படுத்தியவர், இப்படி அல்வாவை குறித்துப் பேசிக் கொண்டிருப்பார்" என்று சாடினார்

குறையா நிறையா
தொடர்ந்து மத்திய அரசு குறித்துப் பேசிய அவர், "மத்திய அரசை திமுக எதற்காக வேண்டுமென்றே குறை சொல்ல வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை, தமிழகத்தின் தேவைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பதாலேயே அதைக் குறிப்பிடுகிறோம். மத்திய அரசின் பட்ஜெட்டில், அரசு தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை அண்ணாமலை சொல்லட்டும். குறை இருக்கிறதா, நிறை இருக்கிறதா எனத் தெரிந்துவிடும்.

பாஜகவும் குரல் கொடுக்கணும்
தமிழக மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்திக் கேட்கும் போது, அதைக் குறை என எடுத்துக் கொள்ளக் கூடாது. சொல்லப்போனால் தமிழ்நாட்டின் தேவைகளை திமுக கேட்கும் போது, எங்களுடன் இணைந்து தமிழகத்திற்காக பாஜகவும் குரல் கொடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் பிப். 19, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications