சார் பதிவாளர்கள் மதிப்பதில்லை! அமைச்சர் மூர்த்தியிடம் குமுறல்! ஓஹோ, இனி நான் பார்த்துக் கொள்கிறேன்!
சென்னை: சார் பதிவாளர்கள் மரியாதை தருவதில்லை என்ற புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. அதில் பேசிய பலரும், சார் பதிவாளர் அலுவலகங்களில் உள்ள குறைகளை அமைச்சர் மூர்த்தியிடம் எடுத்துக் கூறினர்.

குறிப்பாக சொத்து வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, சொத்து விற்பவர்களாக இருந்தாலும் சரி, பல இடங்களிலும் சார் பதிவாளர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது என்றும் காரணமே இல்லாமல் பல இடங்களில் காத்திருக்க வைக்கும் அவலம் நிகழ்வதாகவும் தெரிவித்தனர்.
கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முன் வைத்த இந்தப் புகாரை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்ட அமைச்சர் மூர்த்தில், விரைவில் இந்த நிலை மாறும் என்ற உறுதியை கொடுத்தார். அதேபோல் கிராமப்புறங்கள் உட்பட சதுர அடி 10 ரூபாய், 20 ரூபாய்க்கு இனி விற்கப்படாது என்றும் சதுர அடியின் விலை குறைந்தபட்சம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறினார்.
இதேபோல் சார் பதிவாளர் அலுவலகங்களில் நிலவும் இன்னும் பல்வேறு சிக்கல்கள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பலரும் எடுத்துச் சொன்னார்கள். அதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி அவற்றை சரி செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, உள்ளிட்ட பெரு நகரங்களிலும் பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications