நீலகிரியை நீலமலை என குறிப்பிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! தமிழக வேளாண் பட்ஜெட் ருசிகரம்!
வேளாண் பட்ஜெட் உரையில் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்திய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீலகிரியை நீலமலை எனக் குறிப்பிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.
நீலமலை என்ற பெயர் பயன்பாடு குறைந்து உதகமண்டலம், ஊட்டி, நீலகிரி என அந்த மாவட்டத்தை அழைக்கும் நடைமுறை இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் நீலகிரியை நீலமலை என சட்டசபையில் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அங்கு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 50 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை அது வெறும் சுற்றுலா தலங்கள் மட்டும் உள்ள மாவட்டமல்ல. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி, உள்ளிட்ட காய் கனிகள் அதிகம் பயிரிடக்கூடிய மாவட்டமாகவும் திகழ்கிறது. ஊட்டி சுற்றுவட்டாரத்தில் விளையும் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு வகைகள் தமிழகம் கடந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீலமலையில் இயற்வை வேளான்மை ஊக்குவிப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு;

''நீலமலையில் அங்கக வேளாண்மை''
''காற்று கசங்காமல், மண் மங்காமல், நீர் நீர்த்துப்போகாமல், உணவுப் பொருள் நஞ்சடையாமல், பயிர் செய்வது முக்கியம் என்கிற எண்ணம் இப்போது பரவலாகி வருகிறது. இயற்கையை இயற்கையாகவே பாவித்து இயைந்து இயைந்து வாழ்ந்து. இயற்கை வளத்தை அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு வழங்குவது இன்றியமையாதது. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மை
''அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேதியியல் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அங்கக வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல், சாகுபடி மானியம் வழங்குதல், அங்ககச் சான்று பெற பதிவு செய்தல், அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.''

தமிழ் சொற்கள்
நீலகிரியை எப்படி நீலமலை எனக் குறிப்பிட்டாரோ அதே போல் இயற்கை வேளாண்மையை அங்கக வேளாண்மை என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். பட்ஜெட் உரையில் தமிழ் சொற்களை முடிந்தவரை பயன்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications