சீமான் நிகழ்ச்சிக்கு வழிமாறிச் சென்ற அமைச்சர் நாசர்! பதறிய பி.எஸ்.ஓ.! பின்னணி என்ன?
சென்னை: சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் நாசர் வழிமாறிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரங்கத்திற்குள் நுழைந்ததும் நான் வந்த நிகழ்ச்சி இதுவில்லையே எனக் கூறிய அமைச்சர் நாசர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதனிடையே இந்த நிகழ்வால் அமைச்சர் நாசரின் பெர்சனல் செக்யூரிட்டு ஆபிசர் பதறிப்போனார்.

கலைவாணர் அரங்கம்
சென்னை கலைவாணர் அரங்கத்தின் 2-வது தளத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. முன்னதாக அதில் கலந்துகொள்வதற்காக வந்த அமைச்சர் நாசர், 2வது தளத்திற்கு செல்வதற்கு பதில் முதல் தளத்தில் இருந்த அரங்கத்திற்குள் நுழைந்தார். அங்கு நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பிரிவு சார்பில் சங்கத் தமிழ் இசை என்ற பெயரில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சீமான் நிகழ்ச்சி
சிறப்பு விருந்தினராக சீமான் அந்த விழாவில் பங்கேற்றிருந்தார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நிகழ்ச்சியை தொகுதி வழங்கிக் கொண்டிருந்தார். சரி அழைப்பின் பேரில் அமைச்சர் நாசர் இந்த விழாவில் பங்கேற்கிறார் போல் என்று நினைத்த கட்சிக்காரர்களும் அது பற்றி வாய் திறக்கவில்லை. உள்ளே சீமான் இருப்பதை பார்த்து அப்படியே யு டர்ன் அடித்த அமைச்சர் நாசர் விறுவிறுவென 2வது தளத்தில் தாம் பங்கேற்க வேண்டிய நிகழ்வுக்கு நடையை கட்டினார்.

வழிமாறி வந்த தகவல்
மேலும், விவரம் சொல்லமாட்டீர்களா என உடனிருந்த அதிகாரிகளிடமும் அவர் கடிந்துகொண்டார். இதனிடையே இந்த நிகழ்வால் அமைச்சர் நாசரின் பி.எஸ்.ஓ. பதறிப்போனார். இதையடுத்து 2வது தளத்தில் ஆலோசனைக் கூட்டத்தை வேகமாக முடித்துக் கொண்டு கலைவாணர் அரங்கத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் நாசர். சங்கத் தமிழ் இசை நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் வழிமாறி வந்த தகவலை சீமானுக்கு அவரது கட்சியினர் தெரிவித்தனர்.

அவசரத்தில் சகஜம்
அரசியலில் அவசர அவசரமாக ஒரே நாளில் பல நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இது போன்ற குழப்பங்கள் சகஜம் என்பது கவனிக்கத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினின் காரில் எடப்பாடி பழனிசாமி மாற்றி ஏறச் சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications