நீட் தேர்வு விலக்கில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்: அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை: நீட் தேர்வு தொடர்பாகவும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வருவது குறித்தும் அமைச்சர் பொன்முடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் என்றாலே திமுக இயக்கத்தினருக்கு அது கொண்டாட்டம் தான். ஏனென்றால், அண்ணா, பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் திமுக மாநிலம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

நிகழ்ச்சி
இந்க ஆண்டு செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திமுக ஐடி விங் சார்பிலும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இன்று நடத்தப்பட்ட ட்விட்டர் ஸ்பேஸில், திராவிடத்தால் கற்றோம் என்ற தலைப்பில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

கேள்வி
அப்போது அவர் கடந்த காலங்களிலும் இப்போதும் கல்வியில் தமிழ்நாடு எந்தளவு முன்னேறி உள்ளது என்பதை விளக்கிப் பேசினார். அப்போது எந்த சமூகத்தினருக்குப் படிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது என்றும் இப்போது அது எப்படிப் பரவலாகி உள்ளது என்பதையும் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது நீட் விலக்கு பெறவும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரவும் எதாவது வாய்ப்பு உள்ளதா என்று பங்கேற்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

நீட் விலக்கு
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, "நீட் தேர்வு விலக்கில் தமிழ்நாடு அரசு மிகவும் உறுதியாக உள்ளது. சட்டமன்றத்திலேயே நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றி உள்ளோம். அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கில் மிகவும் உறுதியாக உள்ளார். நேற்று நடந்த தென் மண்டல மாநாட்டில் கூட முதல்வர் ஸ்டாலின் இதையே வலியுறுத்தினார்.

போராட்டம்
இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நீட்டை அகற்றத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். சட்ட ரீதியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதற்கான போராட்டம் தொடரும். விரைவில் நீட் விலக்கு பெறும் என்பதில் நம்பிக்கை உள்ளது. அதேபோல கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும். நமக்கு மட்டுமில்லை, இது அனைத்து மாநிலங்களுக்குமான உரிமை. அதை நிலைநாட்ட வேண்டும்.

கல்வி
கல்வி என்பது மாநில உரிமையாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிகம் ஈடுபடுகிறது. அதைத் தடுத்து கல்வியில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். இதற்கான போராட்டத்தையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்கும்.

உதயநிதி
நீட் தேர்வு விவகாரத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி உறுதியாக உள்ளார். அவர் தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் ஒன்று திரட்டி இதற்காகக் குரல் கொடுத்து வருகிறார். நீட் விலக்கு பெற இதெல்லாம் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநிலத்தின் கல்வியை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அளிக்கும் பரிந்துரையே இதில் பின்பற்றப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications