மேடையில் வைத்துக்கொண்டு வார்த்தையை விட்ட ஆளுநர் ரவி.. அமைச்சர் பொன்முடி தந்த "பதிலடி!"
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தன்னை மேடையில் வைத்துக்கொண்டே பேசியதற்கு, அமைச்சர் பொன்முடி இன்று பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
அண்ணாமலை பல்கலை. நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு யு.ஜி.சியின் அங்கீகாரத்தை பெற்றுத்தரச் சொல்லும் அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை படிக்க வேண்டும் என ஆளுநர் ரவி நேற்று பேசினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று அமைச்சர் பொன்முடி, புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்கு படித்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அதைப் பற்றி பேசி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி
சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புரிந்து கொண்ட பிறகுதான்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பொதுத்தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும். இங்கு சிலர் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்கு படித்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அதைப் பற்றி பேசி வருகிறோம் எனத் தெரிவித்தார்.

அமைச்சரை குறிப்பிட்டு ஆளுநர்
நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு யு.ஜி.சியின் அங்கீகாரத்தை பெற்றுத்தரச் சொல்லும் அமைச்சர் பொன்முடி, தயவுசெய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை முதலில் படிக்க வேண்டும். அதை முழுவதும் படிக்காமலும், புரிந்து கொள்ளாமலும் சிலர் எதிர்த்து வருகின்றனர் எனப் பேசினார்.

பதிலடி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தன்னை மேடையில் வைத்துக்கொண்டே, புதிய கல்விக் கொள்கையை அமைச்சர் முதலில் முழுமையாக படிக்க வேண்டும் எனப் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி இன்று ஆளுநரைக் குறிப்பிடாமல், "சிலர் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அதனை நன்கு படித்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அதைப் பற்றி பேசி வருகிறோம்" எனப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஏழாம் பொருத்தம்
பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு மாறான கருத்துகளைப் பேசி வரும் ஆளுநரும், அமைச்சர் பொன்முடியும் ஒரே மேடையில் பங்கேற்று வருவதால் தொடர்ந்து இவர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. கடந்த வாரமும் இதேபோல, இருவரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications