சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்.. மறுத்த ஆளுநர் ரவி? அமைச்சர் பொன்முடி பரபர அறிக்கை! என்ன நடந்தது
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் கோப்புகளில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுத்தாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த உறுப்பினர் என். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர் என் ரவி மறுப்பதாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "1922 ஜூலை 15ல் பிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும், சிறந்த சட்டமன்ற உறுப்பினர் என். சங்கரய்யா.
அவர் நம் தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி கெளரவ முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்டம், 1965, அத்தியாயம் XX, தொகுதி 1 ல் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வத்தியாயத்தில் கௌரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர்-வேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார்.
இந்நிலையில் 02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (Syndicate) மற்றும் ஆட்சிப் பேரவையில் (Senate) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்குமாறு ஆளுநர் - வேந்தர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications