சென்னை மெரினாவில் சிரித்து கொண்டே கேட்ட செந்தில் பாலாஜி.. உடனே செய்த பொன்முடி
சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். அமைச்சர் பொன்முடியும் அப்போது உடன் இருந்த நிலையில், நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பார்ப்போம்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்து வந்தார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் செப்டம்பர் 26ம் தேதியான இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை விசாரித்து முடிப்பதற்கு ஏற்படும் காலதாமதம், நீண்ட நாட்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருவது, இந்த இரண்டு காரணங்களையும் அடிப்படையாக கொண்டு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் அளித்தனர். இதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி வியாழக்கிழமை இரவு வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை அவரது ஆதரவாளர்களும், திமுக தொண்டர்களும் மலர்தூவி மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் அப்போது உடன் இருந்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது, "என்மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி. என்மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய் வழக்கு. அந்த வழக்கை சட்டரீதியாக, நீதிமன்றத்தில் எதிர்கொண்டு மீண்டு வருவேன். கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் வாழ்நாள் நன்றிகளை சமர்பிக்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர். செந்தில் பாலாஜி மரியாதை பூக்களை தூவி மரியாதை செலுத்தும் முன்பு, தன் அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் பொன்முடியிடம் கொடுத்து பூக்களை தூவ சொன்னார்.
ஆனால் சிரித்தபடியே பொன்முடி, நீங்கள் தூவுங்கள் என்றார். அதற்கு சிரித்தபடியே செந்தில் பாலாஜி, பொன்முடியை முதலில் தூவுமாறு அன்புடன் வேண்டுகோள் வைத்தார். இதை ஏற்று பொன்முடியும் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செந்தில் பாலாஜி பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் காரில் புறப்பட்டு சென்ற பொன்முடியை கார் கதவு வரை வந்து செந்தில் பாலாஜி வழியனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications