"எல்லாத்துக்கும் மேல என் தம்பி..” டிஆர்பி ராஜாவுக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து கூறிய அமைச்சர் பிடிஆர்!
சென்னை : மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். "தமிழ்நாடு தொழில் துறையைக் மகத்தான உயரங்களுக்கு தம்பி டிஆர்பி ராஜா கொண்டு செல்வார் என்பது என் உறுதியான நம்பிக்கை." என பிடிஆர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி. ராஜா தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர் : முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டது முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் '1 ட்ரில்லியன் டாலர்' பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு அரசு.
இந்நிலையில் தான் தொழில்துறையின் அமைச்சராக மன்னார்குடி தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது திமுகவின் தகவல், தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும், மாநில திட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் டிஆர்பி ராஜா. தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வருகிறார்.
பிடிஆருக்கு பிறகு : ஐ.டி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்பிலிருந்து விலகிய பிறகு ஐடி விங் செயலாளர் பொறுப்பு டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு 'ஐ.டி. விங் 2.0' என மாநிலம் முழுவதும் உள்ள தகவல், தொழில்நுட்ப அணியியினருக்கு உற்சாகமூட்டினார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இடத்தை சிறப்பாக பதிலீடு செய்து வருகிறார் டிஆர்பி ராஜா.
இந்நிலையில், நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த நிதித்துறை இலாகா அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தொழில் துறை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் தம்பி : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சக சட்டமன்ற உறுப்பினரும், சக முன்னாள் பொது கணக்குக் குழு உறுப்பினரும், எனக்குப் பிறகு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டாவது மாநிலச் செயலாளரும், இவை அத்தனைக்கும் மேலாக எனக்கு நல்ல நண்பரும், நலன் விரும்பியுமான அன்பிற்குரிய தம்பி டிஆர்பி ராஜாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைக்த் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் தொழில்துறை அமைச்சரும் புதிய நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆற்றிய மகத்தானப் பணிகளைக் சிறப்பாக தொடர்ந்து முதல்வர்
ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு தொழில் துறையைக் மகத்தான உயரங்களுக்குக் தம்பி டிஆர்பி ராஜா கொண்டு செல்வார் என்பது என் உறுதியான நம்பிக்கை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications