விடலையே.. ஒரு நிமிஷம் கூட ஓயலையே.. உண்மையில் "மிரட்டியது" கஜா அல்ல.. உதயக்குமார்தான்!
சென்னை: "சூப்பர்" என்றுதான் அமைச்சர் உதயகுமாரை சொல்ல வேண்டும்!!
கஜா புயலால் உயிர்கள் இழந்தோர், வீடு வாசல்கள் இழந்தோர், நிலபுலன்களை இழந்தோர் ஏராளம்!! ஆனால் ஆயிரம்தான் சொன்னாலும் இந்த கஜா புயலை சிறப்பாக கையாண்டது அதிமுக அரசு!
குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரின் செயல்பாடுகள் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்துவிட்டது. இதுவரை எத்தனையோ புயல்கள் தமிழகத்தை புரட்டி போட்டு சென்றிருக்கின்றன.
நாங்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்கள்..அவிங்க தீபாவளிக்கு மட்டும்தான் குளிப்பார்கள்- டிடிவி தினகரன்
புயல்-வெள்ள பாதிப்புகள்
அப்போதெல்லாம் பொதுமக்கள் தரப்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆளும் கட்சிக்கு கண்டனங்கள்தான் பரிசாக கிடைத்திருக்கின்றன. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டிருந்தாலும் சரி, அனைத்து வெள்ளம், புயல் பாதிப்புகளுக்கு மக்களின் வாயில் நிறையவே விழுந்தது அதிமுக அரசுதான்!
குறை சொல்ல முடியாது
ஆனால் கஜா வரபோவது முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டாலும், இந்த முறை அதிமுக களத்தில் இறங்கிவிட்டது. அதற்கான முன்னேற்பாடுகளை வேகவேகமாக செய்ய துவங்கியது. 49 உயிர்கள் பறிபோன நிலையிலும், மக்கள் இன்னமும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையிலும், இயல்பு வாழ்க்கை திரும்பவும் கிடைக்க 1 வாரம் கூட ஆகலாம் என்ற நிலையிலும்... அதிமுக அரசை யாரும் குறை சொல்ல முன்வரவில்லை.
அப் - டேட் அமைச்சர்
அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் உதயகுமாரின் செயல்பாடுகள்தான். அதனால்தான் கஜாவால் வந்த உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கிறது என்றும் சொல்லலாம். அமைச்சர் உதயகுமார் இத்தனை முறை செய்தியாளர்களை சந்தித்து பேசியதில்லை. தொடர்ந்து அரசு சார்பான நிலவரங்களை அப்-டேட் செய்து கொண்டே இருந்தார்.
கண்ட்ரோல் ரூம்
வருவாய் துறை சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரியை விடவில்லை ஆர்.பி. உதயகுமார்.. தொடர்ச்சியான போன்கால்கள் மூலம் எங்கே, என்ன நடக்கிறது, அங்கு நிலைமை எப்படி இருக்கிறது, என பிஸியாகவே இருந்தார். கடலோர மாவட்டங்களில் உள்ள கண்ட்ரோல் ரூம்களுக்கு உதயகுமாரிடமிருந்து போன்கால்கள் பறந்து கொண்டே இருந்தன. அமைச்சரின் இந்த அதிரடியால் அதிகாரிகள் ஆடியே போய்விட்டார்கள்.
எல்லோரும் இருந்துவிட்டால்?
வேலையில் கொஞ்சம் சுணக்கமோ, தொய்வோ ஏற்பட்டாலும், "எத்தனை பேர் உசுரை கையில் பிடிச்சிட்டு இருக்காங்களோ... யாருக்கு என்ன ஆச்சோ "என்று சொல்லி சொல்லியே அதிகாரிகளை விரட்டி துரிதப்படுத்தி கொண்டே இருந்தார். ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் அமைச்சர் உதயகுமாரின் இந்த துரித செயலை முதல்வரில் இருந்து எல்லோருமே பாராட்டினார்கள். அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து வரவிருக்கும் புயல், மழைகளிலிருந்தும் மக்களை காக்க அனைத்து ஏற்பாடுகளுக்கும் இப்போதே தயாராகிவிட்டார் உதயகுமார்!! அமைச்சர் உதயகுமாரை போலவே எல்லோரும் இருந்தால் மக்களுக்கு எவ்வளவு நல்லா இருக்கும் என்று கூட நினைப்பு வந்து போகிறது!
நல்ல பெயர்
'மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. எனது பாராட்டுக்கள்..' என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்கொண்டு, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை என அனைவரையுமே மனம் திறந்து பாராட்ட வைத்துவிட்டது. வர்தா புயலை ஓபிஎஸ் எப்படி கையாண்டாரோ, அதேபோல எடப்பாடி பழனிசாமியும் மிக சாதுர்யமாக கையாண்டதும் ஒப்புக் கொள்ள வேண்டியதே. சமீப காலமாக அதிமுகமேல் அதிருப்தி மேல் அதிருப்தியாக வந்து கொண்டிருக்கும் நிலையில், அரசுக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்துவிட்டு போயுள்ளான் கஜா!!
அடித்து சொல்லலாம்
உண்மையாக சொல்வதானால் ஜெயலலிதா அரசு 2015ல் செயல்பட்டதை விட இந்த கஜா புயலின்போது அதிமுக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டது.. இதை அடித்து சொல்லலாம்.!